Pages

Friday, October 18, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: குமரன் பத்மநாதன்!

Friday, October 18, 2013
இலங்கை::வடக்கில் பிரிவினைவாதம் பேசினால் சிங்கள வர்களும் பிரிவினையினையே கோரி நிற்பார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று  புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்தார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வடக்கு மக்கள் கொடுத்த வாக்குகளானது ஒட்டுமொத்த தமிழர்களினதும் ஆதரவுக் குரல் என்பதனை சம்பந்தன் மறந்து விடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
அது தொடர்பாக குமரன் பத்மநாதன் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கையும் கிழக்கையும் இணைத்து தனி நாட்டினை உருவாக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால் அது ஒரு போதும் நிறைவேறப் போவதில்லை.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரிவினைவாதம் பேசிக் கொண்டிருக்கும் வரையிலும் சிங்களத் தீவிரவாதிகளும் எதிர்ப்பினை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இதனைப் புரிந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புத்திசாலித்தனமானதொரு அரசியலை செய்ய வேண்டும்.
வடக்கின் தமிழ், முஸ்லிம் மக்களை பாதுகாத்து நாட்டில் அவர்களுக்கெனவொரு அந்தஸ்தினை கொடுக்க வேண்டுமென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதே சிறந்ததாகும்.மாறாக தெற்கினை எதிர்த்துக்கொண்டு வடக்கில் ஆட்சியமைப்பதென்பது சாத்தியமற்ற விடயமே.
 
கடந்த கால அனுபவங்கள் எம் அனைவருக்கும் நன்றாகவே தெரிந்ததே.எனவே, அச் சூழலை மீண்டும் ஆரம்பித்து எஞ்சியிருக்கும் தமிழர்களையும் கொன்று விடக்கூடாது.
 
மேலும், சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது தமிழர்களுக்காகவோ அல்லது வடக்கிற்காகவோ என நினைப்பது தமிழர்களின் முட்டாள் தனமேயாகும். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான விளக்கங்களையே சர்வதேசமும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவும் கேட்கின்றன.
 
அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றதை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டு தமிழர்களின் வாழ்க்கையோடு விளையாட நினைத்தால் அதன் பின் விளைவுகள் மிகவும் மோசமானதாகவே அமையும்.
அதேபோன்று கனடாவில் அதிகளவான புலம் பெயர் தமிழர்கள் வாழ்வதனாலும் அவர்கள் கனேடிய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதன் காரணத்தினாலும் கனடா பொது நலவாய மாநாட்டினை புறக்கணிக்கின்றது.
 
தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள பதவிப் போராட்டம் தமிழ் மக்களை சலிப்படையச் செய்துள்ளது. தமிழ் மக்களினால் கிடைக்கப்பெற்ற வெற்றியினை சுயநலத்திற்காக பயன்படுத்தி சுகபோக வாழ்க்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அனுபவிக்க நினைத்தால் அது அவர்களுக்கே எதிராக மாறிவிடும்.
 
பதவி ஆசையின் விளைவுகள், கடந்த கால வரலாறுகள் எமக்கு நன்றாகவே தெரிய வைத்துள்ளன. அதை இன்றைய தமிழ், சிங்களத் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
 
வடக்கு மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் தேவைகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியில் போராடி வெற்றி பெற்றால் அதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment