Pages

Tuesday, May 7, 2013

பாகிஸ்தானியப் பிரஜையொருவரால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 30 ஆயிரம் கருத்தடை மருந்து ஊசிகள் சிங்களவர்களின் இனப்பெருக்கத்தை தடுக்கவே: பொதுபலசேனா!

Tuesday, May 07, 2013
இலங்கை::பாகிஸ்தானியப் பிரஜையொருவரால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கிழங்குக் கொள்கலன்களில் 30 ஆயிரம் கருத்தடை மருந்து ஊசிகள் எந்த நோக்கத்திற்காக மறைத்து வைத்து கொண்டு வரப்பட்டதென்பதை திட்டவட்டமாக கூற முடியா விட்டாலும் சிங்கள மக்களின் இனப்பெருக்கத்தை தடுப்பதற்காகவே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொதுபலசேனா குற்றம் சாட்டியது.
 
இலங்கைக்கு 30,000 கருத்தடை ஊசி மருந்துகளைக் கொண்டு வந்த பாகிஸ்தானியரின் பின்னணியில் இங்கு இயங்கும் பிரபல்யமான அரச சார்பற்ற நிறுவனமொன்று உள்ளதுடன் எதிர்வரும் 18 ஆம் திகதி கூரகலவில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளதாகவும் அவ் அமைப்பு தெரிவித்தது.
 
இது தொடர்பாக பொதுபலசேனாவின் இணைப்புச் செயலாளர் ஆனந்ததேரர் மேலும் தகவல் தருகையில்,
 
பாகிஸ்தானியப் பிரஜையொருவரால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கிழங்குக் கொள்கலன்களில் 30 ஆயிரம் கருத்தடை மருந்து ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பாகிஸ்தானிய பிரஜையும் கைது செய்யப்பட்டுள்ளார்.
எந்த நோக்கத்திற்காக இது மறைத்து வைத்து கொண்டு வரப்பட்டதென்பதை திட்டவட்டமாகக் கூற முடியா விட்டாலும் சிங்கள மக்களின் இனப்பெருக்கத்தை தடுப்பதற்காகவே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இச் சம்பவம் தொடர்பில் நாம் தகவல்களை சேகரித்துள்ளோம். மேலும் பல தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. தற்போதைய தகவல்களின் பிரகாரம் இந்தப் பாகிஸ்தானியப் பிரஜையின் பின்னணியில் இலங்கையில் இயங்கும் பிரபல்யமான அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றே உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதன் பின்னணியில் உள்ள உண்மைகளை எதிர்வரும் 11 ஆம் திகதி கேகாலையில் இடம்பெறவுள்ள பொதுபலசேனாவின் மாநாட்டில் பகிரங்கப்படுத்துவோம்.
 
பலாங்கொடை கூரகல பிரதேசம் பௌத்த புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு அங்குள்ள பௌத்த புனிதச் சின்னங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே அங்கு எதிர்வரும் 18 ஆம் திகதி புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்யவுள்ளோம்.
 
அமெரிக்காவிற்கு விஜயத்தை மேற்கொண்ட எமது அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் எதிர்வரும் புதன்கிழமை 8 ஆம் திகதி நாடு திரும்புகின்றனர்.
 
அமெரிக்கா விஜயம் வெற்றியளித்துள்ளது. அங்கு பொதுபலசேனாவின் 5 கிளைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனந்த தேரர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment