Tuesday, March 12, 2013

தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசு தயக்கம் - பா.ஜ., மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன்!

Tuesday, March 12, 2013
திருவாரூர்::இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறது,'' என, பா.ஜ., மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் நேற்று முன் தினம் மாலை நடந்த பா.ஜ., ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆலோனைக் கூட்டத்திற்கு பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. விவசாயிகள் போராட்டங்களுக்குப் பின், மத்திய அரசு குழு அனுப்பி ஆய்வு செய்தது. இரு மாதங்களாகியும் பாதிக்கப்பட்ட, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. மத்திய அரசு விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை. ரயில்வே பட்ஜெட்டில், தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறது. இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பவத்தை, சேனல்-4, உலகின் பார்வைக்கு வெளிக் கொண்டு வந்துள்ளது. பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட, படத்தை பார்த்து தமிழக மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிப்பதுடன், அனைத்து நாடுகளின் கவனத்தை ஈர்த்து, இலங்கைக்கு எதிராக, தனி தீர்மானத்தை மத்திய அரசு கொண்டு வர÷ வண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., கோரிக்கை: "பட்டப் படிப்புகளை தமிழில் படித்திருந்தால் மட்டுமே, ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசு பணி தேர்வுகளை, தமிழில் எழுத முடியும் என்ற உத்தரவை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்' என, பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டப் படிப்புகளை தமிழில் படித்திருந்தால் மட்டுமே, தமிழில் தேர்வு எழுத முடியும். ஆங்கில வழியில், பட்டப் படிப்புகளை படித்திருந்தால், தமிழ் தாய் மொழியாக இருந்தாலும், தமிழில் தேர்வு எழுத முடியாது என, கூறியுள்ளது. இதுபோன்ற கட்டுப்பாடுகள் பிற மொழிகளுக்கு இல்லை. எனவே, பணியாளர் தேர்வாணையம் விதித்துள்ள கட்டுப்பாட்டை உடனடியாக நீக்க வேண்டும். தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள், ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசு பணியாளர் தேர்வுகளை, தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment