இலங்கை::காணாமல் போனவர்கள் எவரும் இராணுவ முகாம்களில் இல்லை என்பதனை இராணுவ உயரதிகாரி என்ற வகையில் என்னால் உறுதியாக கூறமுடியும்' என வன்னிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்று வன்னிக் கட்டளைப் பீடமான ஜோசப் முகாமில் நேற்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
சுலோகங்களை ஏந்தியவாறு காணாமல் போனோர் தொடர்பில் போராடுவதாலும் இராணுவத்தினர் மீதும் அரசாங்கத்தின் மீதும் குற்றம் சுமத்துவதாலும் இதற்கு தீர்வு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை.
யுத்தத்தின்போது முல்லைத்தீவு முகாமில் சுமார் 1300 இராணுவத்தினர் காணாமல் போனார்கள். அவர்களது பெற்றோர்கள் கோவில்களுக்கும் பள்ளிகளுக்கும் விகாரைகளுக்கும் போய் தனது பிள்ளை வருவார் வருவார் என வழிபட்டு வருகின்றார்கள். ஆனால் ஒரு வருடத்தின் பின்னர் அவர்கள் வராவிட்டால் இறந்து விட்டதாக கருதுகின்றார்கள்.
யுத்தம் இடம்பெறும்போது இராணுவத்தில் 6000 பேர் வரையில் இறந்தார்கள். அதுபோல் விடுதலைப் புலிகளிலும் தலைவர்கள் உட்பட பலர் இறந்திருக்கின்றார்கள். அவர்களை படம் பிடித்து காட்ட முடியவில்லை.
யுத்தத்தின்போது ஒரு இராணுவ சிப்பாய் இறந்துவிட்டால் அவருக்கு அருகில் இருக்கும் இராணுவ வீரருக்கு அவர் இறந்துவிட்டாரா உயிருடன் இருக்கின்றாரா என்பதை கூற முடியாது. அதேபோல் விடுதலைப் புலிகளிலும் ஒரு போராளி இறந்துவிட்டால் அவர் இறந்துவிட்டாரா இல்லையா என அதன் தலைவர்களுக்கே தெரியும்.
அந்த வகையிலேயே காணாமல் போனவர்கள் எந்த இராணுவ முகாமிலும் இல்லை என்பதை உறுதியாக கூற முடியும்.
அத்துடன் மனிதாபிமான இராணுவ நடவடிக்கையின் போது வடக்கில் 3 இலட்சம் மக்கள் வரையில் இடம்பெயர்ந்தார்கள். 'இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றவில்லை.அவர்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ளவில்லை' என் வெளிநாடுகள குற்றம் சுமத்தியிருந்தன. ஆனால் நாம் இடம்பெயர்ந்தவர்களை அவர்களது சொந்த இடங்களில் படிப்படியாக மீளக்குடியமர்த்தி வருகிறோம்.
இந்த மீள்குடியேற்றம் தாமதமாகுவதற்கு காரணமாக இருப்பது கண்ணிவெடிகள்' என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment