Thursday, April 12, 2012திருநெல்வேலி::நாடு முழுவதும் நிலநடுக்க பீதி இருந்தாலும், நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுஉலை செயல்பாட்டில் எவ்வித தடையும் இல்லை என்றும் பணிகள் வழக்கம் போல் நடைபெற்றன என்றும் கூடங்குளம் நிலைய இயக்குனர் காசிநாத் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடல் சார்ந்த பிரச்னைகள் குறித்து தகவல் தரும் இந்திய தேசிய மையம் ஐதராபாத்தில் உள்ளது. அங்கிருந்து எங்களுக்கு இந்தோனேஷியா நிலநடுக்கம் மற்றும் இந்தியா அளவிலான நில அதிர்வு, சுனாமி ஆகியன குறித்தும் எங்களுக்கு தகவல் வந்தது. ஆனால் நாங்கள் எப்போதும் வழக்கமாக அறிவிக்கப்படும் ஒரு குறைந்த பட்ச ( ஆரஞ்சு நிற ) எச்சரிக்கை அலாரத்துடன், பணிகள் தொடர்ந்து நடந்தது. இதில் எவ்வித இடைநிறுத்தமும் இல்லை. குறிப்பாக சுனாமி வந்தாலும் கூடங்குளத்தை பாதிக்காது. காரணம் கடல் மட்டத்தில் இருந்து இந்த நிலையம் 7.5 மீட்டர் உயரத்தில் உள்ளது என்றார்.
இலங்கை அரசு அச்சம் தேவையற்றது: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து இலங்கை மிக அருகாமையில் இருப்பதால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அந்த அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. இது குறித்து இந்திய அணுசக்தி திட்ட தலைமை அதிகாரி டாக்டர் ஸ்ரீ குமார் பானர்ஜி கூறுகையில்;
இலங்கை அரசின் அச்சம் தேவையற்றது. உலகிலேயே இல்லாத அளவிற்கு இந்த அணுமின்நிலையம் முழு பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. உறுதியாக சொல்கிறேன் பாதிப்பு என்பதற்கு இடமில்லை. இலங்கை அரசின் எல்லைக்கு அப்பால் உள்ள இது குறித்து அது கவலைப்பட வேண்டாம். சர்வதேச சட்ட விதிமுறைகளின்படியே இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதற்கிடையில் கூடங்குளம் அணு எதிர்ப்பாளர்கள் இந்தோனேஷியா நில நடுக்கத்தை காரணம் காட்டி அங்கு பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என கேட்டுள்ளனர்.
No comments:
Post a Comment