Pages

Friday, March 23, 2012

உண்ணாவிரதம் நீடிப்பு இடிந்தகரையில் கண்காணிப்பு தீவிரம்!

Friday, March 23, 2012
வள்ளியூர்::கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படுவதை கண்டித்து இடிந்தகரையில் 5வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நீடித்து வருகிறது. வைகோ, திருமாவளவன் ஆகியோர் பேரணியாக கிராமத்துக்குள் வர தடை விதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுஉலையை திறக்க தமிழக அமைச்சரவை கடந்த 19ம் தேதி ஆதரவு அளித்தது. இதைத் தொடர்ந்து அணுமின் நிலைய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ரஷ்ய விஞ்ஞானிகள் 100 பேர் உள்பட 950 பேர் இன்று 5வது நாளாக பணிக்கு வந்தனர். அங்கு விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என அதிகாரிகள் கூறி வருகின்றனர்.இதற்கிடையே, அணுஉலைக்கு எதிரான போராட்டமும் வலுத்து வருகிறது. போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், உறுப்பினர் புஷ்பராயன் உள்ளிட்டோர் இடிந்தகரையில் இன்று 5வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சுமார் 3 ஆயிரம் பேர் உண்ணாவிரத பந்தலில் அமர்ந்துள்ளனர். அவர்களில் உள்ளூர் மக்கள் மட்டும் வீட்டுக்கு செல்கின்றனர். கூத்தங்குளி, பெரியதாழை, பெருமணல் உள்ளிட்ட வெளியூர்களை சேர்ந்த மீனவர்கள் பந்தலிலேயே இரவு, பகலாக அமர்ந்துள்ளனர்.

உதயகுமார் உள்பட போராட்ட குழுவினர் மீது இதுவரை 100க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உதயகுமார், புஷ்பராயனை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அவர்கள் இருப்பதால் போலீசார் உள்ளே நுழைய தயங்குகின்றனர். அதே நேரத்தில் அந்தப் பகுதியில் இயல்பு நிலை திரும்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இடிந்தகரை வழியாக பல ஊர்களுக்கு நேற்று முதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. பதற்றம் தணிந்ததால் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் கொளத்தூர் மணி ஆகியோர் இடிந்தகரைக்கு இன்று காலை பேரணியாக செல்லப் போவதாக அறிவித்தனர். முன்னதாக வைகோ தலைமையில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஆர்ப்பாட்டத்துக்கு மட்டுமே போலீசார் அனுமதி அளித்துள்ளனர். பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி இடிந்தகரைக்கு செல்வோம் என கொளத்தூர் மணியும் வேல்முருகனும் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment