Friday, March 23, 2012புது டெல்லி::கூடங்குளம் அணுமின் உற்பத்தி அடுத்த 2 மாதங்களில் தொடங்கும். முதற்கட்டமாக தமிழகத்துக்கு 500 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறுகையில், கூடங்குளத்தில் முதல் கட்டமாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இந்த பணிகள் மூன்று மாதங்களில் முடிவடையும். அதன் பின்னர் மின் விநியோகம் செய்யப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஆனால் மின்தேவையை கருத்தில் கொண்டு இரண்டு மாதத்தில் மின் உற்பத்தி செய்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அவர்களிடம் கூறியுள்ளது.
அணுஉலைகளை குளிரூட்டும் பணி 10 நாட்களில் முடிவடையும். அதன் பின்னர் யுரேனியம் கோல்கள் பொருத்தப்படும் பணியும், அடுத்து பத்து நாட்களில் முடிவடைந்த பின்னர் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான பணிகள் தொடங்கும். ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் முதல் கட்ட அணு உலை திட்டத்தில் இருந்து தமிழகத்திற்கு 500 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும்.
அதைத் தொடர்ந்து அடுத்த 2 மாதங்களில் இரண்டாவது அணு உலை திட்டம் தொடங்கப்படும். இதற்கான தொடக்க விழாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் வர சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு தமிழகத்திற்கு அடுத்தகட்டமாக 500 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment