Friday, February 3, 2012

முற்றுகிறது அதிமுக-தேமுதிக மோதல்!!

Friday, February 03, 2012
சென்னை::தேமுதிக தலைவர் விஜயகாந்த் எம்எல்ஏ பதவிக்கேட்டு, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் கெஞ்சுவதைப்போல், திண்டிவனத்தில் வெள்ளிக்கிழமை (03.02.2012) பேனர் வைக்கப்பட்டிருந்தது. காந்தி சிலை அருகே இந்த பேனர் வைக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல், முதல் அமைச்சர் பதவியை தருமாறு விஜயகாந்த்திடம், ஜெயலலிதா கேட்பது போல தேமுதிகவினர் ஒரு பேனரை வைத்திருந்தனர்.

அதிமுக பேனர் அருகிலேயே, தேமுதிகவினரின் பேனர் இருந்ததால் பதட்டம் உருவானது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

சிறிது நேரத்தில் இரு கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இருதரப்புக்கும் கைகைலப்பும் ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் இருதரப்பையும் விலக்கினர்.

திண்டிவனம் நகராட்சி கவுன்சிலர் சாரதாம்பாள் மகன் ஐயப்பன், வார்டு செயலாளர் திருவேங்க்டம் தலைமையிலான அதிமுகவினர் முதலில் பேனர் வைத்துள்ளனர்.

இதனை கண்டித்து, தேமுதிக நகர செயலாளர் வெங்கடேசன் தலைமையில் காவல்நிலையத்தில் தேமுதிகவினர் புகார் கொடுத்துள்ளனர். பின்னர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்த தேமுதிமுகவினர், பதிலுக்கு போட்டி பேனர் வைத்துள்ளனர்.

இந்த கைகலப்பில் காயம் அடைந்ததாக, தேமுதிகவைச் சேர்ந்த இரண்டு பேர் சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக தேமுதிகவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் விஜயகாந்த் அநாகரிகமாக நடந்துகொண்டதாக 10 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அடுத்த நாள் தேமுதிக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு நிற சட்டை அணிந்து சென்று தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதற்கு அடுத்து நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இரு கட்சிகளும் பிரிந்தன. தற்போது இரு கட்சி தலைவர்களும், கூட்டணி வைத்தது வெட்கக்கேடு என்று கூறிக்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment