Sunday, February 12, 2012சென்னை::சென்னையில் கடந்த வாரம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் அந்த கட்சி எம்.எல்.ஏ.க்களை கேலி செய்யும் வகையில் அ.தி.மு.க. வினர் போஸ்டர் ஒட்டினார்கள்.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களை கேலி செய்யும் வகையில் தே.மு.தி.க.வினர் நேற்று மதியம் போஸ்டர் ஒட்டினார்கள். சாலி கிராமம் கண்ணம்மாள் தெருவில் உள்ள விஜயகாந்த் வீட்டு சுவற்றிலும் அருகில் உள்ள வீட்டு சுவர்களிலும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
இதைப்பார்த்து அ.தி.மு.க. வினர் அதிர்ச்சி அடைந்தனர். போஸ்டர் ஒட்டியதற்கு 129-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் செந்தில்பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தனது ஆதரவாளர்களுடன் சென்று விஜயகாந்த் வீட்டு சுவற்றில் ஒட்டியிருந்த போஸ்டரை கிழித்தார்.
இதையறிந்ததும் அங்கு தே.மு.தி.க.வினர் குவிந்தனர். அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. போலீசார் அங்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. கவுன்சிலர் செந்தில் பாண்டியன், தே.மு.தி.க. நிர்வாகி வி.என். ராஜன் ஆகியோர் தனித்தனியாக போலீசில் புகார் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்காக விஜயகாந்த் வீட்டு முன்பு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment