Wednesday,February,08,2012பீஜிங்::அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அந்நாட்டு உயரதிகாரிகள், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை சந்தித்து பேசுகிறார். மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 3 நாள் பயணமாக நேற்று இரவு சீனா சென்றார். தலைநகர் பீஜிங்கில் இன்று அவர் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ மூத்த உறுப்பினர் ஜூ யாங்காங்கை சந்தித்தார். கிருஷ்ணாவை வரவேற்று பேசிய ஜூ யாங்காங், ‘சீனாவும் இந்தியாவும் ஒருங்கிணைந்து செயலாற்ற நிறைய இடம் இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் திருப்தி அளிக்கிறது’ என்றார்.
கடந்த 2010-ல் இந்தியா வந்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசியதையும் அவர் நினைவு கூர்ந்தார். சுமார் ஒரு மணிநேரம் இருவரும் பேசினர். சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜெய்ச்சியை கிருஷ்ணா இன்று மதியம் சந்திக்கிறார். பின்னர், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி இயக்குனர் வாங் ஜியாருய், சீன வெளியுறவு அதிகாரி டாய் பிங்கியோ ஆகியோரையும் சந்தித்து பேசுகிறார். பீஜிங்கில் ரூ.50 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்திய தூதரக கட்டிடத்தை முறைப்படி திறந்து வைக்கிறார்.
No comments:
Post a Comment