Thursday, February 02, 2012புதுடெல்லி::2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் 122 லைசன்ஸ்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ப.சிதம்பரத் திடம் விசாரணை நடத்துவது குறித்து விசாரணை கோர்ட் 2 வாரத்தில் முடிவு செய்ய வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விதிமுறைகளுக்கு புறம்பாக வழங்கப்பட்ட லைசன்ஸ்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், முந்தைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி அடங்கிய பெஞ்ச் விசாரித்து இன்று தீர்ப்பளித்தது. அதன்படி முறைகேடாக வழங்கப்பட்டதாக கூறப்படும் 122 லைசன்ஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2ஜி விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கவில்லை. இந்த விவகாரத்தில் சிபிஐ நீதிமன்றம் முடிவு எடுக்கலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அதேசமயம் இரண்டு வாரத்துக்குள் சிபிஐ நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும் என கெடு விதித்துள்ளனர். மேலும் 2ஜி விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 2ஜி லைசன்ஸ் வழங்குவதற்கான புதிய பரிந்துரைகளை தயார் செய்யும்படி டிராய் அமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 4 மாதத்துக்குள் இவற்றை ஏலம் வாயிலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 2ஜி வழக்கு விசாரணையின் இன்றைய நிலை அறிக்கையை சிவிசியிடம் சமர்ப்பிக்க சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பிரதமருடன் கபில்சிபல் அவசர ஆலோசனை
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் வீடியோகான், யுனிநார், யூனிடெக், ரிலையன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 லைசன்ஸ்களை சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடியாக ரத்து செய்தது. இவற்றை 4 மாதத்தில் மீண்டும் புதிதாக ஏலம் விடவும் அறிவுறுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து தொலைதொடர்பு துறை உயர்அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் கபில்சிபல் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
No comments:
Post a Comment