Pages

Thursday, January 5, 2012

பெண் டாக்டரைக் கொன்று கைதான டிரைவர் ஏற்கனவே ஒரு கொலை செய்தவர்!

Thursday,January 05, 2012
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பெண் டாக்டர் சேதுலட்சுமியைக் கொலை செய்து கைதாகியுள்ள ஆட்டோ டிரைவர் மகேஷ் ஏற்கனவே ஒரு கொலை வழக்கிலும், கொலை முயற்சியிலும் சம்பந்தப்பட்டவர் ஆவார். ரவுடிகள் பட்டியலிலும் அவரது பெயர் இருப்பதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள காமராஜ்நகரை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (50). கல்லூரி பேராசிரியர். இவருடைய மனைவி சேதுலட்சுமி (48). இவர், தூத்துக்குடி இ.எஸ்.ஐ. மருந்தகத்தில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.

தனது வீட்டையொட்டி கிளினிக் ஒன்றையும் நடத்தி வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவருமே டாக்டர்கள். மகள் அமெரிக்காவில் உள்ளார்.

இந்த நிலையில், தூத்துக்குடி ஆவுடையார்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான மகேஷ் தனது 6 மாத கர்ப்பிணி மனைவியான நித்யாவை டாக்டர் சேதுலட்சுமியிடம் காட்டி வந்துள்ளார்.

கடந்த 30ம் தேதி நித்யாவுக்கு திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சேதுலட்சுமி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அவரைப் பரிசோதித்தபோது குழந்தை இறந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அறுவைச் சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.

6 மாதக் குழந்தை என்பதால் நித்யாவுக்கும் உடல் நிலை மோசமானது. இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள இன்னொரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார் டாக்டர் சேது லட்சுமி. அங்கு நித்யா இறந்துள்ளார்.

இதனால் ஆவேசமடைந்த மகேஷ் அன்றே டாக்டர் சேதுலட்சுமியை வந்து பார்த்து மிரட்டி தகராறு செய்துள்ளார். இதுகுறித்து சேதுலட்சுமியின் கணவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் புகாரை போலீஸார் அலட்சியமாக கையாண்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போதே மகேஷைக் கூப்பிட்டு அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், டாக்டர் கிளினிக்குக்குப் பாதுகாப்பு கொடுத்திருந்தால் கொலை வரை இது போயிருக்காது என்கிறார்கள் டாக்டர்கள்.

ஆனால் போலீஸ் தரப்பில் நடவடிக்கை இல்லாததாலும், டாக்டரின் போலீஸ் புகாராலும் கோபமடைந்த மகேஷ், ஜனவரி 2ம் தேதி இரவு பத்தரை மணியளவில் சேதுலட்சுமியின் கிளினிக்குக்கு வந்துள்ளார். அப்போது நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் டாக்டர் சேதுலட்சுமி. கையில் அரிவாள் கத்தியுடன் தனது நண்பர்களையும் அழைத்துக் கொண்டு வந்த மகேஷ் கொலை வெறியுடன் டாக்டரை கொடூரமாக வெட்டிச் சாய்த்துள்ளார்.

பெண் என்றும் பாராமல் மிகக் கொடூரமாக இந்தக் கொலையைச் செய்துள்ளனர். இதைத் தடுக்க முயன்ற மருத்துவமனை பெண் ஊழியர் வள்ளிக்கும் அரிவாள் வெட்டு விழுந்து அவரும் காயமடைந்தார்.

கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுப் பட்டதால் டாக்டர் சேதுலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மகேஷ் மட்டும் சில மணி நேரங்களில் பிடிபட்டார். அவருடன் வந்து கொலையை நடத்திய குருமுத்து (இந்த குருமுத்துக்கு வயதுத 19தான் ஆகிறது), அப்பாஸ், ராஜா ஆகியோரையும் போலீஸார் பின்னர் கைது செய்தனர்.

நேற்று ஆறுமுகம், வெற்றிவேல் என மேலும் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

மகேஷ் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்ளது. ரவுடிகள் பட்டியலிலும் இவர் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு நபர் பெண் டாக்டரை மிரட்டியதாக புகார் வந்ததுமே போலீஸார் துரிதமாக நடவடிக்கையி்ல் இறங்கியிருந்தால் நிச்சயம் இந்தக் கொலையைத் தடுத்திருக்கலாம் என்று தூத்துக்குடி மக்களும் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment