Pages

Wednesday, June 19, 2019

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதம் இடம்பெறும்: சிறிலங்கா பொதுஜன பெரமுன!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதம் இடம்பெறும் என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன நேற்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க தற்போதைய மைத்ரி-ரணில் தலைமையிலான அரசாங்கம் பல்வேறு சூழச்சிகளை மேற்கொண்டு வந்தாலும் அரசியல் சாசனத்திற்கு அமைய ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் டலஷ் அழகபெரும தெரிவித்திருக்கின்றார்.கொழும்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன தவிசாளர் ஜி.எல்.பீரிஸ்
தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் டலஷ் அழக்பெரும இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
 
ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தேர்தல்களை கண்டு அச்சமடைந்துள்ளதாக குற்றம்சாட்டும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவினர், ஜனாதிபதித் தேர்தலையும் ஒத்திவைக்க பல்வேறு சதித்திட்டங்களை அரங்கேற்றி வருவதாக குற்றம்சாட்டுகின்றனர்.அதன் ஒரு அங்கமாகவே ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவதா என்று மக்களின் கருத்துக்களை அறிவதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தும் யோசனை என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டலஷ் அழக்பெரும குற்றம்சாட்டுகின்றார்.
 
அரசாங்கம் பாரதூரமான பின்னடைவுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. அரசியல் ரீதியாகவும் இந்த அரசாங்கம் பெரும் குழப்பத்திற்குள் இருக்கின்றது. அதனால் தேர்தல்களைக் கண்டு இந்த அரசாங்கம் அச்சமடைந்திருக்கின்றது. அந்த காரணத்திற்காகத்தான் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை இரண்டரை வருடங்கள் ஒத்திவைத்திருந்தது. மாகாண சபைகளுக்கான தேர்தலையும் ஒரு வருடமும் ஒன்பது மாதங்களாக ஒத்துவைத்து வருகின்றது. இந்த பின்னணியிலேயே ஜனாதிபதித் தேர்தலையும் நடத்தாது இருப்பதற்காக பல்வேறு சதிகளை அரங்கேற்றி வருகின்றது இந்த அரசாங்கம். இந்த சதித் திட்டத்தின் முதலாவது செயற்பாடாக தங்களுக்கு பெரும் சவாலாக அமையக்கூடியவர் என்று அரசாங்கம் கருதும் கோட்டாபய ராஜபக்சவை ஏதாவது குற்றச்சாட்டை சுமத்தி அவரை சிறையில் வைக்க முயற்சித்து வருகின்றது. இரண்டாவதாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் திட்டம். மூன்றாவது விடையம் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறைமையை இல்லாதொழிக்கும் முயற்சியை முன்னெடுப்பது. நான்காவதாக நாட்டில் இன, மதவாத மோதல்களை தூண்டுவதன் ஊடாக நாட்டில் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்தி அதன் ஊடாக தேர்தல்களை நடத்தாது இருக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த சதி திட்டங்கள் தொடர்பில் நாட்டு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்,
 
மைத்ரி – ரணில் அரசாங்கம் எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டாலும் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டலஷ் அழக்பெரும கூறுகின்றார்.
“இந்த அரசாங்கம் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்க முயற்சிக்கின்றது. எனினும் அதனைக் கண்டு நாட்டு மக்கள் அஞ்சத் தேவையில்லை. ஏனெனில் அதனை அரசாங்கத்தால் சய்ய முடியாது. குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கவே முடியாது. பல்வேறு உபாயங்களை முன்னெடுத்து தொழில்நுட்ப ரீதியான விளக்கங்களை கூறி மாகாண சபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளது. எனினும் ஜனாதிபதித் தேர்தலை இந்த அரசாங்கத்தால் ஒத்திவைக்க முடியாது. ஏனெனில் அரசியல் சாசனத்தின் படி குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆக வேண்டும். எவராலும் அதனை ஒத்திவைக்க முடியாது. நாட்டின் தாய்ச் சட்டமாக கருதப்படும் அரசியல் சாசனத்தில் பதவியில் இருக்கும் ஜனாதிபதி தனது பதவிக்காலம் முடிவடையும் திகதிக்கு ஒரு மாதகாலத்திற்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்தியாக வேண்டும் என்று மிகத்தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதனாலேயே டிசெம்பர் 9 ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்தியாக வேண்டும் என்று நாம் கூறி வருகின்றோம். ஆனால் இன்று நாம் அதற்கு முன்னதாகவே அதாவது நவம்பர் மாதத்திலேயே ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்று கூறுகின்றோம்.
 
 இதனை மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். ஏனெனில் கட்சிகளின் செயலாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையாளர் கல்விப் பொதுத் தராதர சதாரணத்தர பரீட்சை டிசெம்பர் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதற்கமைய பரீட்சை நிலையங்களாக செயற்படும் பாடசாலைக் கட்டடங்கள் மூன்று தினங்களுக்கு முன்னதாகவே பரீட்சை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதாவது நவம்பர் 30 ஆம் திகதி பாடசாலைகள் ஒப்படைக்கப்பட வேண்டும். இதற்கமைய ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள சனிக்கிழமை நவம்பர் 23 ஆம் திகதியே வருகின்றது. அதனால் நவம்பர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்பதை இந்த இடத்தில் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment