Pages

Tuesday, September 29, 2015

ஐ.நா செயலாளர் நாயகம் வழங்கிய விருந்துபசாரத்தில்: மைத்திரி!

Tuesday, September 29, 2015
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தை முன்னிட்டு ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வழங்கிய விருந்துபசாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விசேட வரவேற்புகிடைத்துள்ளது.
இந்த விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டீன் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மேலும் சில அரச தலைவர்களுடன் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது ஜனாதிபதி உலகத் தலைவர்களுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
 
ஐக்கிய நாடுகளின் 70 ஆவது பொது சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை உரை நிகழ்த்தள்ளார்.
நியூயோர்க் நேரப்படி நாளை (30) காலை 9.45 க்கு ஜனாதிபதி உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்த பின்னர் ஐக்கிய நாடுகள் பொது சபையில் உரையாற்றும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்,
கடந்த 25 ஆம் திகதி நியூயோர்க்கில் ஆரம்பமான ஐ.நா பொதுச்சபை கூட்டத் தொடரின் இம் முறை தொனிப்பொருளாக சமாதானம் , பாதுகாப்பு மற்றும் எதிர்கால பொருளாதார நோக்கு காணப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட சர்வதேச அரச தலைவர்கள் பலரும் பொதுச்சபையில் உரை நிகழ்த்த உள்ளனர்.
ஜனாதிபதி ஏற்கனவே ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் , அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி , இந்திய பிரதமர் நரேந்திர மோடி , பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் , சுவிஸர்லாந்து ஜனாதிபதி டிடயர் பர்கால்டர் , தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜெகோப் சுமா உள்ளிட்ட அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர , நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ , மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநான் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோர் ஜனாதிபதியுடன் ஐ.நா பொதுச்சபை கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 2 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர்.

No comments:

Post a Comment