Pages

Tuesday, January 6, 2015

பயங்கரவாத எதிர்ப்பு நாடாம் பாக்., அமெரிக்கா சான்றளித்து நிதியுதவி!

Tuesday, January 06, 2015
வாஷிங்டன்: லஷ்கர் இ தொய்பா (எல்.இ.டி.,), ஜெய்ஷ் இ முகமது (ஜே.இ.எம்.,) ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வருவதாக, அமெரிக்க உள்துறை அமைச்சர் ஜான் கெர்ரி பாராட்டியுள்ளார். இந்த சான்றிதழ் காரணமாக, அமெரிக்காவின் இவ்வாண்டிற்கான, 53.20 கோடி டாலர் நிதியுதவி, பாகிஸ்தானுக்கு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
 
பாகிஸ்தானுக்கு, நான்கு ஆண்டுகளில், 750 கோடி டாலர் நிதியுதவி வழங்கும் கெர்லி லுகார் மசோதா, அமெரிக்க பார்லிமென்டில், கடந்த, 2010ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில், பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, நிதியுதவி வழங்கப்படும் என்ற முக்கிய நிபந்தனை இடம் பெற்றுள்ளது. இதனால், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பாராமுகமாக இருந்த, பாக்.,கிற்கு, அமெரிக்கா, 50 சதவீத நிதியுதவி மட்டுமே வழங்கியுள்ளது. எஞ்சிய நிதியுதவியை பெறுவதற்காகவே, அல் குவைதா, தலிபான், எல்.இ.டி., ஜே.இ.எம்., போன்ற பயங்கரவாத இயக்கங்கள் மீது, அண்மைக் காலமாக, பாக்., கண்துடைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது.
 
அதே சமயம், மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட எல்.இ.டி., தலைவர் ஹபீஸ் சயித்தை கைது செய்யாமல், அவர் சுதந்திரமாக பாக்.,கில் நடமாடவும், இந்தியாவிற்கு எதிராக, கலவரத்தை தூண்டும் வகையில் பேசவும் அனுமதி அளித்துள்ளது. அவரை ஒப்படைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு, பாக்., இன்னும் செவி சாய்க்காமல் உள்ளது. அதுபோல், இந்தியாவிற்கு எதிராக, பகிரங்கமாக வன்முறையை தூண்டி விடும், ஜே.இ.எம்., தலைவர் மசூத் அசாரையும், நவாஸ் ஷெரீப் அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.
 
இது தவிர, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தி, அராஜகம் செய்து வருகிறது. அண்மையில், குஜராத் கடல் பகுதியில் மர்ம படகு வெடித்த விபத்தில் பலியானவர்கள், கராச்சியில் இருந்து வந்த பயங்கரவாதிகள் என்ற ஐயமும் உள்ளது. இதுபோன்ற சூழலில், பாக்., பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை சிறப்பாகச் செய்வதாக, ஜான் கெர்ரி சான்று தந்திருப்பது, இந்தியாவுக்கு கவலை அளித்துள்ளது. குஜராத்தில் வரும், 11ம் தேதி துவங்கும் வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்ள வரும், ஜான் கெர்ரி, இம்மாத இறுதியில் பாகிஸ்தான் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment