Pages

Wednesday, January 7, 2015

பொலிஸ் பாதுகாப்புடன் ஜனாதிபதித் தேர்தல் வாக்குப் பெட்டிகள் இன்று காலை சகல வாக்கெடுப்பு நிலையங்களுக்கு!

Wednesday, January 07, 2015
இலங்கை::
ஜனாதிபதித் தேர்தல் வாக்குப் பெட்டிகள்  இன்று காலை சகல வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் அனுப்பப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
மாவட்ட தேர்தல் காரியாலயங்களிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன், குறித்த வாக்கெடுப்பு நிலையத்துக்கு பொறுப்பான தலைமை அதிகாரியுடன் இந்த வாக்குப் பெட்டிகள் இன்று எடுத்துச் செல்லப்படவுள்ளன.
 
22 தேர்தல் மாவட்டங்கள் முழுவதற்கும் 12313 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குப் பெட்டிகளின் போக்குவரத்துக்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அரச பஸ் வண்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன. போதியளவு பஸ் வண்டிகள் இல்லாத மாவட்டங்களில் தனியார் வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
 
மேலும் தரைமார்க்கமாக வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்ல முடியாத இடங்களுக்கு கடல் மார்க்கமாகவும் வான் மார்க்கமாகவும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யாழ்., மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறான போக்குவரத்து ஏற்பாடுகள் பயன்படுத்தப்படவுள்ளன.
 
வாக்குப் பெட்டிகள் மாவட்டக் காரியாலயங்களிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டதன் பின்னர் வாக்கெடுப்பு நிலையங்களில் அந்நிலைய அதிகாரிகளினால் ஒத்திகை நிகழ்வொன்று செய்யும் படி தேர்தல்கள் ஆணையாளரினால் வாக்கெடுப்பு நிலைய அதிகாரி வேண்டப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment