Tuesday, December 16, 2014

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மைத்திரி பகிரங்கப்படுத்த வேண்டும்: திஸ்ஸ அத்தநாயக்க!

Tuesday, December 16, 2014
இலங்கை::கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தம் என்ன என்பதை மைத்திரிபால சிறிசேன நாட்டுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டுமென சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று வேண்டுகோள் விடுத்தார்.
 
பாணந்துறையில் நேற்று மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட இவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
 
மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றால் பிரதமர் பதவியை ரணிலுக்கு வழங்குவதாகக் கூறினாலும் அது ஒருபோதும் நடக்காது. சந்திரிகாவே பிரதமர் போல இருந்து செயற்படுவார்.
 
இதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. ஐ.தே.கவின் முதுகில் ஏறி மைத்திரி தனது வெற்றியை உறுதிப்படுத்தப் பார்க்கின்றார். அவ்வாறானால் ஐ.தே.கவுக்கு இழைக்கப்படும் அநீதியை நினைத்துப்பார்க்க முடியாமல் இருக்கிறது.
 
மைத்திரிபால வெறும் பொம்மையாகவே செயற்படுகிறார். இந்தத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் போட்டியாக எவரும் இல்லை. ஜனாதிபதி மூன்றாவது தடவையும் வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது. இதனை நாட்டின் பலபகுதிகளிலும் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் மூலம் உறுதிப்படுத்தக்கூடியதாகவிருக்கின்றது.
 
ஜெனீவாவில் மனித உரிமைப் பேரவையில் எடுத்த இலங்கைக்கு எதிரான தீர்மானங்களும் அது தொடர்பான ஆலோசனைகளையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதிகாரத்தை சுயாதீனமாக்க வேண்டும் என மைத்திரி கூறிவருகின்றார்.
 
இது தொடர்பாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும். மைத்திரி இதனைக் கூறினாலும் அவரின் பின்னணியிலிருந்து வெளிநாட்டு சக்திகள் செயற்படுவது உறுதியாகிறது. ஆகவே மக்கள் நாட்டைக் காட்டிக்கொடுக்கின்ற சக்திகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment