Pages

Tuesday, December 2, 2014

மலேசிய பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் டான் ஸ்ரீ தத்தோ ஸ்ரீ ஹாஜி சுல்கிப்ளி பின் மொஹமட் இலங்கை விஜயம்!

Tuesday, December 02, 2014
இலங்கை::இலங்கை மற்றும் மலேசியாவுக்கு இடையிலான உறவு மிகவும் பலமானது இந்த இரு தரப்பு உறவுகள் தொடர்ந்தும் பேணப்படும் என்று இலங்கை வந்துள்ள மலேசிய பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் டான் ஸ்ரீ தத்தோ ஸ்ரீ ஹாஜி சுல்கிப்ளி பின் மொஹமட் ஸின் தெரிவித்தார்.
 
அதேபோன்று இலங்கை இராணுவத்தினர் வழங்கும் பயிற்சி நடவடிக்கைகள் மிகவும் உயர் தரத்தில் அமைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
தியத்தலாவயிலுள்ள இராணுவ அகடமியில் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் இராணுவ கெடட் அதிகாரிகளின் பிரியாவிடை மரியாதை அணிவகுப்பு நேற்றுக் காலை இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மலேசிய பாதுகாப்பு படைகளின் பிரதானி இவ்வாறு குறிப்பிட்டார்.
 
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில் :-

இலங்கை மற்றும் மலேசியா ஆகிய இரண்டு நாட்டு இராணுவங்களும் சிறந்த வரலாற்று பின்னணியைக் கொண்ட சவால்களுக்கு முகம் கொடுத்துவரும் இராணுவங்களாகும்.
 
யுத்தம் முடிவுற்றவுடன்; இராணுவத்தின் செயற்பாடுகள் முடிந்து விடாது. ஏனெனில் இலங்கையை பொறுத்த மட்டில் யுத்தம் முடிவுற்றாலும் யுத்தத்திற்கு பின்னர் நாட்டை கட்டியெழுப்பதல், அபிவிருத்தி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. தற்பொழுது அவை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எனவே, தேசிய பாதுகாப்பின் ஸ்தீரத்தன்மையை பேணவும் யுத்தத்திற்கு பின்னர் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளுக்கும், பொருளாதார வளர்ச்சிகளுக்கும் அர்ப்பணிப்புடன் தமது ஒத்துழைப்புக்களை வழங்க இன்று வெளியேறும் இராணுவ அதிகாரிகள் முன்வர வேண்டும்.
 
எனவே, யுத்தம் முடிவுற்ற நிலையிலும் கூட இலங்கையில் இது போன்ற தரமான இராணுவ பயிற்சிகள் வழங்கப்படுகின்றமை மிகவும் பாராட்டுக்குறியது. இங்கு உங்களுக்க தொழில் சார் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அதிகாரிகள் தமது அறிவு, திறமையை மேம்படுத்த சிறந்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது.
 
இலங்கை இராணுவ தளபதியின் அழைப்பின் பேரில் இந்த அகடமியின் பிரியாவிடை அணிவகுப்பு நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
 
இன்று முதல் இராணுவ அதிகாரியாக இணைந்துக் கொள்ளும் அனைவரும் தமக்கு வழங்கப்பட்ட தரமான பயிற்சி, திறமை மற்றும் அறிவை பயன்படுத்தி தாய் நாட்டின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். இன்று முதல் சர்வதேசம் உட்பட சகல சவால்களுக்கும் முகம் கொடுக்க தயாராக வேண்டும்.
மலேசியாவை பொறுத்த மட்டில் இலங்கையுனான உறவு மிகவூம் பலமாக பேணிவருகிறது. இரு நாட்டு இராணுவ ரதீயிலான உறவுகளும் மிகவும் பலமானது இவை எதிர் காலத்திலும் தொடர்ந்தும் பேணப்படும் என்றார்.
 
135 இராணுவ வீரர்களே கெடட் அதிகாரிகளாக பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறினர். இவர்களில் சூடான் நாட்டைச் சேர்ந்த இரண்டு இராணுவ வீரர்களும், மாலைதீவைச் சேர்ந்த ஒரு இராணுவ வீரரும் இதில் அடங்குவர்.
 
பாகிஸ்தான் இலங்கைக்கு அண்பளிப்பு செய்த தவளராஜா என்ற குதிரையில் இருந்தவாறு மேஜர் ஜே. கே. கே பஸ்நாயக்க மரியாதை அணிவகுப்பை நடத்தியமை விஷேட அம்சமாகும்.
 
பயிற்சிகளை முடித்துக் கொண்ட வீரர்களில் சகல துறைகளிலும் சிறப்பு திறமைகளை வெளிக் காண்பித்த எஸ். ஏ. டி. என். டி திஸாநாயக்க, வை. வை. கே. மீபாகல, எச். ஏ. ஜே. ஹெட்டியாராச்சி, எம். எம். வை. ஜே. பி. செனவிரட்ன மற்றும் ஆர். ஏ. ராஜபக்ஷ ஆகிய ஐந்து வீர, வீராங்கனைகளுக்கு மலேசிய பாதுகாப்பு படைகளின் பிரதானி வாள் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்.
 
இந்நிகழ்வில் பங்களதேஷ் இராணுவ அகடமியின் கொமடான்ட் மேஜர் ஜெனரல் ஜஹாங்கிர் கபீர் தளுக்தர், தியத்தலாவை இராணுவ அகடமியின் கொமடாண் பிரிகேடியர் ராஜகுரு, சீனா, பங்களாதேஷ் உட்பட வெளிநாட்டு இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 
தனது பாரியார் மற்றும் தூதுக்குழுவுடன் தியத்தலாவையில் இரண்டு நாட்கள் தங்கிருந்த மலேசிய பாதுகாப்பு படைகளின் பிரதானி தியத்தலாவையில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டதுடன் தியத்தலாவையில் அமைக்கப்பட்ட படைவீரர் நினைவு தூபிக்கும் மலர் அஞ்சலி செலுத்தினார்.

No comments:

Post a Comment