Pages

Wednesday, December 17, 2014

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை வெற்றிபெறச் செய்வதன் ஊடாகவே யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்தி வளர்ச்சி அடையும்: பசில் ராஜபக்ஷ!

 Wednesday, December 17, 2014
இலங்கை::ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை வெற்றிபெறச் செய்வதன் ஊடாகவே யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திகளை முன்னெடுக்கும் அதேவேளை அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு  நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் முன்னெடுக்கப்படும் தேர்தல் பணிகள் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றம் உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளை வென்றெடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்கான சேவைகளை ஒழுங்காக செய்ய முடியாதுள்ளனர்.

இன்றைய சூழலில் அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்ட இப்பகுதியை முன்னேற்றுவதற்கு பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கக் கூடியதாக இருந்த போதிலும் அவற்றை செய்ய விரும்பவில்லை.
வடக்கு மாகாண சபையை கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஒருவருடத்திற்கு மேலாக மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்திகளை முன்னெடுக்கவில்லையென்பதை நாம் பார்க்கக் கூடியதாக இருந்தது.

எனவே, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சரியானவரை தெரிவு செய்யும் வகையில் மக்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பை உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டும்.

அந்தவகையில், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் அபிவிருத்தி செயற்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கும் அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கும்  மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது வலியுறுத்தினார்.

இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment