Pages

Tuesday, December 9, 2014

யாழில் 8 கோடி ரூபாய் பெறுமதியான 150 கிலோ கஞ்சாவுடன் ஐவர் கைது!

Tuesday, December 09, 2014
இலங்கை::
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை, பொலிகண்டி பகுதியில் 150 கிலோகிராம் கஞ்சா பொதிகளுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி ரி.எஸ்.மீடின் நேற்று திங்கட்கிழமை (08) தெரிவித்தார்.
 
திக்கம் சந்தியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய 4 சந்தேக நபர்கள், பருத்தித்துறை பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (07) இரவு கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் கஞ்சாவை கொள்வனவு செய்வதற்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
 
இதனையடுத்து, கஞ்சா கொண்டுவரப்படும் இடம் தொடர்பான தகவல் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, அவ்விடத்துக்கு இராணுவத்தினருடன் சென்று தயாராக நின்றிருந்த பொலிஸார், 150 கிலோ கஞ்சா பொதிகளை படகில் கொண்டுவந்த சந்தேகநபரை கைது செய்ததுடன், கஞ்சா மற்றும் படகு ஆகியவற்றையும் கைப்பற்றினர்.
 
கைப்பற்றப்பட்ட கஞ்சா, 8 கோடி ரூபாய் பெறுமதியுடையது எனவும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

No comments:

Post a Comment