Saturday, October 11, 2014
இலங்கையில் ட்ரோலிங் முறை தடை செய்துள்ள போதும் இழுவைப் படகுகள் மூலம் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதால் மீன் வளங்கள் முழுமையாக அழிந்து போகும் என்பதுடன் இதனால் வட பகுதியிலுள்ள தமிழ் மீனவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்திய பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே.மதூரிடம் நேற்று தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற இரண்டாவது வருடாந்த பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் ஆர். கே. மதூர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்து உரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியைச் சந்தித்த இந்திய பாதுகாப்பு செயலாளர் இலங்கையிடமிருந்து நாங்கள் ஏராளமான பல விடயங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். இரண்டு தெற்காசிய அயலவர்களும் பகிர்ந்துவரும் பலமான நட்பில் இலங்கை இந்தியாவிற் கிடையிலான பாதுகாப்புத்துறைக்கான கூட்டுறவு ஒரு முக்கியமான அம்சம் என்பதை ஜனாதிபதி ராஜபக்ஷ தொடர்ச்சியாகப் பேணி வந்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் கவனஞ் செலுத்தப்பட்ட பல்வகைப்பட்ட விடயங்களில், இரு நாடுகளின் பல்வேறு இராணுவப் பிரிவுகளுக்கிடையிலான பயிற்சிகளை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடினர்.
இந்தியாவில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி அனுபவங்கள் சிறப்பான முறையில் அமைந்திருந்ததாக ஜனாதிபதியிடம் திரு. மதூர் தெரிவித்தார்.
தற்போது தொடர்ந்து கொண்டிருக்கும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு மேலதிகமாக, இரு நாடுகளிலுமுள்ள பாதுகாப்புப் பயிற்சி நிறுவனங்களில் வருகை விரிவுரையாளர்களையும் நீண்டகால பயிற்சியாளர்களையும் பரிமாற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை இலங்கையும், இந்தியாவும் ஆராயுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் இழுவைப்படகு மீன்பிடி காரணமாக இலங்கை மீனவர்களால் பிரதானமாக வடக்கு மீனவர்கள், எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழலின் அழிவு என்பது மிகப்பெரிய பிரச்சினை என ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார். இழுவைப்படகு மீன் பிடியை நாங்கள் தடைசெய்துள்ளோம்.
இழுவைப்படகு மீன்பிடி நடைமுறை தொடருமானால் இலங்கை, இந்தியா இரண்டிலுமிருந்து மீன் வளங்கள் முழுமையாக அழிந்துபோகும் என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ராஜபக்ஷா இலங்கையின் வடக்குப் பகுதியிலுள்ள தமிழ் மீனவர்களே இதன்காரணமாக அதிகம் பாதிக்கப்படுவர் எனச் சுட்டிக்காட்டினார்.
அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் தீர்வொன்றைக் கொண்டுவர உதவும் என இரண்டு தரப்பினரும் நம்பிக்கை வெளியிட்டனர்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற 2வது வருடாந்த காதுகாப்புப் பேச்சுவார்த்தையில் பற்குபற்றுவதற்காக திரு. மதூர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இரண்டு தேசங்களும் பங்குபற்றும் பல்வேறு பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகளில் இதுவும் ஒன்றாகும்.
இலங்கை இந்திய கரையோரப் பாதுகாப்புப் படைகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளுக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மட்டத்தில் ஏற்கனவே பயனுள்ள பணியாற்றும் உறவு காணப்படுவது அவதானிக்கப்பட்ட பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இரண்டு நாடுகளும் பங்குபற்றியுள்ள பல்வேறு பாதுகாப்புச் சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்குமிடையே ஏற்கனவே காணப்படும் தொடர்புகளை மேலும் பலப்படுத்த உதவும் என ஜனாதிபதியும், இந்திய பாதுகாப்புச் செயலாளரும் ஏற்றுக்கொண்டனர்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை. கே. சிங்ஹா, இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் ராம் சுஹக் சிங் (ஞிஹசீ ஷிஞிகுஹகீ ஷிஞிஙூகீகு) இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் திருமதி சுச்சித்திரா துரை (ஷிஞிணீகுகூஞ்குசுஹ ளிஞிசுஹகூ) ஆகியோரும் திரு. மதூர் உடன் இணைந்து கொண்டனர்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி ஷேனுகா செனவிரத்ன, இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.



No comments:
Post a Comment