Pages

Tuesday, October 14, 2014

2022-க்குள் அனைவருக்கும் சொந்த வீடு: மராட்டிய பிரசாரத்தில் பிரதமர் மோடி வாக்குறுதி!

Tuesday, October 14, 2014
பால்கர்::மராட்டிய சட்டசபை தேர்தல் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4-ந் தேதி தனது பிரசாரத்தை தொடங்கினார். மராட்டியத்தின் பல்வேறு இடங்களில் பம்பரம் போல சுழன்று வந்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று அவர் கங்காவ்லி, ரத்னகிரி, பால்கர் ஆகிய பகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அங்கு நடந்த கூட்டங்களில் பங்கேற்று அவர் பேசுகையில் கூறியதாவது:-

காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மராட்டியத்தில் நிலப்பிரபுத்துவ அமைப்பை ஏற்படுத்தி விட்டனர். தந்தை பதவிக்கு வந்ததும், சில மாவட்டங்கள் மீது கவனம் செலுத்துமாறு தன் மகன்களிடம் கேட்டு கொள்கிறார். ஆகையால், கொங்கன் மற்றும் சிந்துதுர்க் பகுதிகளின் தலைவிதியை மாற்ற வேண்டும் என்றால், பா.ஜனதா அரசு ஆட்சி அமைப்பதை உறுதி செய்யுங்கள்.

காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் ஊழலில் மூழ்கிவிட்டது. ஏழைகள் மட்டுமின்றி நாட்டுக்காக உயிர் துறந்த போர் தியாகிகளின் விதவை மனைவிகளிடமும் கொள்ளையடித்தனர். எனவே, இந்த தேர்தலில் திருடர்களையும், கொள்ளையர்களையும் தூக்கி வீசுங்கள். பரம்பரை ஆட்சியின் பிடியில் இருந்து மராட்டியம் விடுதலை பெற வேண்டும்.

மத்தியில் 30 ஆண்டுகள் கழித்து ஒரு கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்து உள்ளது. எனவே, மராட்டியத்திலும் நல்லாட்சி மலர பா.ஜனதாவுக்கு மெஜாரிட்டி தாருங்கள். பா.ஜனதா தனி மெஜாரிட்டி பெற்று ஆட்சியமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இயற்கை வளங்கள் நிறைந்த பகுதி, கொங்கன் ஆகும். இங்குள்ள கடல், மராட்டியம் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நாட்டுக்கே ‘செழிப்பின் நுழைவுவாயில்’ ஆக திகழ்கிறது. வளர்ச்சிக்கான வளங்கள் இங்கு ஏராளம் உள்ளது. ஆனால், 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இதனை மறைத்து விட்டது.

சுராஜ்யா (நல்லாட்சி) எனது பிறப்புரிமை. 15 ஆண்டுகளாக இங்கு ஆட்சியில் இருந்த அவர்கள், மாநில கருவூலத்தை காலி செய்தது மட்டும் அல்லாமல், 2 தலைமுறைகளையும் வீணடித்து விட்டனர்.

புதியதாக உருவாக்கப்பட்ட பால்கர் மாவட்டத்தை, மராட்டியத்தின் சிறந்த மாவட்டமாக மாற்ற நாங்கள் முழு ஆதரவு அளிப்போம். பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி, பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கவில்லை. ஆனால் மத்தியில் வாஜ்பாய் அரசு பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கியது.

2022-ம் ஆண்டு நாடு 75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாட உள்ளது. அதற்குள் சொந்த வீடு இல்லாதவர்கள் யாருமே இருக்கக்கூடாது. அனைவருக்கும் சொந்த வீடு உருவாக்கி கொடுப்பதே எனது கனவாகும். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். மக்களே எனக்கு எஜமானர்கள். நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உங்களுக்கு பதில் அளிப்பேன்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
 

No comments:

Post a Comment