Pages

Sunday, September 28, 2014

முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கில் தீர்ப்பு: சோகத்தில் மூழ்கிய தமிழகம்!

Sunday, September 28, 2014
மதுரை::அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மீதான வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டதை அடுத்து தமிழகம் சோகக் கடலில் மூழ்கியது. அதிமுக தொண்டர்களும், தாய்மார்களும் சோகத்தில் மூழ்கினர். பல இடங்களில் பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுததை காண முடிந்தது. இந்த தீர்ப்பை அடுத்து தமிழகத்தில் பரவலாக கடைகள் அடைக்கப்பட்டன.

திமுக தலைவர் கருணாநிதி மற்றும் சுப்பிரமணியசுவாமி ஆகியோரது கொடும்பாவிகள் தமிழகத்தின் பல இடங்களில் எரிக்கப்பட்டன. இந்த தீர்ப்பை கேட்டதும் அதிமுக தொண்டர்கள் கலக்கமடைந்து சோகக்கடலில் மூழ்கினர்.
முன்னதாக இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை 8.30 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டார். பிறகு அங்கிருந்து கார் மூலம் நீதிமன்ற வளாகத்திற்கு முதல்வர் ஜெயலலிதா புறப்பட்டு சென்றார். அவரது வருகையை முன்னிட்டு தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நீதிமன்ற வளாகத்தில் திரளாக திரண்டிருந்தனர்.

இந்த தீர்ப்பையொட்டி பிரதமருக்கு வழங்கப்படுவது போல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன . கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே ஒரு கட்டத்தில் கர்நாடக போலீசார் லேசான தடியடி நடத்தினர். முதலில் இந்த தீர்ப்பு காலை 11 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் அங்கு திரண்டிருந்த அதிமுகவினர் மத்தியில் டென்ஷன் அதிகமானது. பின்னர் மதியம் ஒரு மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் தீர்ப்பு அறிவிக்கப்படவில்லை. இதனால் மேலும் பதட்டமும், பரபரப்பும் அதிகரித்தது. பின்னர் ஒருவழியாக நேற்று பிற்பகல் 3 மணியளவில் முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. 4 மணிக்கு மேல் தண்டனை விபரமும் அறிவிக்கப்ப்டடது. இந்த தீர்ப்பை அறிந்ததும் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்தனர்.

திமுக அரசு தொடர்ந்த 11 பொய் வழக்குகளில் இருந்து மீண்டவர் முதல்வர் ஜெயலலிதா. அதைப் போலவே இந்த வழக்கிலும் முதல்வர் ஜெயலலிதா மீண்டு வருவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்த அதிமுகவினருக்கு இந்த தீர்ப்பு பேரிடியாக அமைந்தது. தீர்ப்பை கேட்டதும் அதிமுக மகளிரணியினர் கண்ணீர் விட்டு அழுததை காண முடிந்தது. சில பெண்கள் மார்பில் அடித்துக் கொண்டு கதறி அழுதனர். சுருக்கமாக சொன்னால் அதிமுக அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை சோகத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள் என்று சொன்னாலும் அது மிகையாகாது. ஆத்திரமடைந்த தொண்டர்கள் பல இடங்களில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் இந்த வழக்கு தொடர்ந்த சுப்பிரமணியன் சுவாமி  ஆகியோரது கொடும்பாவிகளை எரித்தனர். தீர்ப்பு வெளியான சில மணி நேரத்திலேயே கடைகள் மளமளவென அடைக்கப்பட்டன.

தமிழகத்தின் பல இடங்களில் அதிமுகவினர் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களை  நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் பஸ்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டன. அதே போல் இங்கிருந்து சென்ற பஸ்களும் கர்நாடக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன. இந்த தீர்ப்பு வெளியானதை அடுத்து தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாதியிலேயே வகுப்புகள் நிறுத்தப்பட்டு மாணவர்கள் வீடு திரும்பினர். மதுக்கடைகளும் உடனடியாக மூடப்பட்டன.

பெட்ரோல் பங்க்குகள் கூட ஆங்காங்கே மூடப்பட்டன. ஏற்கனவே முதல்வர் மீது தொடரப்பட்ட வழக்குகளில் அவர் மீண்டு வந்ததை போல இந்த வழக்கிலும் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் நேற்று காலையில் திரண்டிருந்தார்கள். இன்னும் சிலர் அந்த நம்பிக்கையில் இனிப்பு கூட வழங்கினார்கள். ஆனால் தீர்ப்பு தாமதமானதை அறிந்ததும் அதிமுகவினர் கருணாநிதியின் கொடும்பாவியை எரிக்க தொடங்கி விட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுப் போனது. சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு அருகே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. ஆனால் அதற்கு முன்பே அவரது வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் தொண்டர்கள் கருணாநிதி ஒழிக என்று கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

முதல்வர் மீதான இந்த வழக்கு முதலில் சென்னை நீதிமன்றத்தில்தான் நடைபெற்று வந்தது. பிறகு 2004ம் ஆண்டில்தான் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதாவது மொத்தம் 18 ஆண்டுகள் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டதை அடுத்து சிறப்பு நீதிமன்றம் பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூர்  பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறை வளாகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பையொட்டிஅந்த வளாகத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
 
அவர்கள் மத்தியிலும் ஒருவிதமான பதட்டமும் பரபரப்பும் காணப்பட்டது. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் ஒருவிதமான பரபரப்பு காணப்பட்டது. ஆங்காங்கே மறியல்கள், போராட்டங்கள் நடத்தி அதிமுகவினர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மொத்தத்தில் தமிழகமே நேற்று சோகத்திலும் கொந்தளிப்பிலும் மூழ்கியது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை எண்ணி தாய்மார்கள் மனம் கலங்கிப் போனார்கள். இது தங்களுக்கு ஏற்பட்ட சோகம் போல அவர்கள் உணர்ந்தனர். இந்த வழக்கில் ஜெயலலிதா மீண்டு வருவார் என்று அதிமுகவினர் மட்டுமல்ல, பொதுமக்களும், தாய்மார்களும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. 

No comments:

Post a Comment