Pages

Thursday, June 5, 2014

புலி பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்குவதை தடுப்பதற்கு முகாம்கள் அவசியம்: வடக்கில் தனியார் காணிகளை இராணுவம் அபகரிக்கவில்லை: ருவன் வணிகசூரிய!

Thursday, June 05, 2014
இலங்கை::சட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவே இராணுவத்தினருக்கு தேவையான காணிகள் வடக்கில் பெறப்படுவதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளரும் பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்குவதை தடுப்பதற்கும் முகாம்கள் அவசியப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
வட மாகாணம் உட்பட நாட்டின் எந்த பாகத்திலும் பாதுகாப்புப் படையினர் பலாத்காரமாக காணிகளைப் பெற்றுக் கொள்வதில்லை என்றும் அவர் தெரிவித்தார். தேசிய பாதூகாப்பை கருத்திற்கொண்டு தமக்குத் தேவையான காணிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு அமைய சம்பந்தப்பட்ட காணி அமைச்சு ஊடாகவே சட்டபூர்வமாக காணிகளைப் பெற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
 
வடக்கின் பல்வேறு பிரதேசத்தின் பாதுகாப்பை கருத்திற் கொண்டே இராணுவ தேவைகளுக்காக காணி அமைச்சிடம் இடங்கள் கோரப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரச காணிகளுடன் தேவைப்படும் தனியாருக்குச் சொந்தமான காணிகளைப் பெற்றுக் கொள்வதற்காக நில அளவை திணைக்கள அதிகாரிகள் காணிகளை அளப்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளனர் எனினும் காணி உரிமையாளர்கள் தமது விருப்பமின்மையை தெரிவித்ததை அடுத்தே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிரதேச செயலாளரிடம் நிலைமையை விபரித்துள்ளனர் என்றார்.
 
சம்பந்தப்பட்ட அதிகாரிகளே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பர் என்று தெரிவித்த அவர், இராணுவத்திற்கு தேவைப்படும் காணிகளை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் சிலர் குற்றஞ்சாட்டுவதைப் போன்று எந்த விதமான ஒளிவு மறைவும் கிடையாது என்றார். பொதுத் தேவைகளுக்காகப் பெறப்படும் காணிகளுக்காக மாற்று காணிகளும் சந்தையிலுள்ள தொகைக்கமைவாக நஷ்டஈட்டுத் தொகையும் வழங்கப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment