செங்கல்பட்டு::செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்த 41 பேர் நள்ளிரவில் திடீரென செய்யாறு முகாமுக்கு மாற்றப்பட்டனர். செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் கிளை சிறை உள்ளது. இது இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமாக செயல்பட்டது. கடந்த 23 ஆண்டுகளாக இந்த முகாமில் இலங்கை, நைஜீரியா, தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த கைதிகளை கியூ பிரிவு போலீசார் அடைத்தனர். இதில் பெரும்பாலானோர் இலங்கையை சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களை விடுவிக்க கோரியும், திறந்தவெளி முகாமுக்கு மாற்ற கோரியும் அடிக்கடி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்களுக்கு ஆதரவாக புலிகள் ஆதரவு அமைப்புகளும் போராட்டம் நடத்தினர். 3 ஆண்டுக்கு முன்பு சிறையில் இருந்த மரத்தை வெட்டி சாய்த்து அதில் ஏறி குதித்து 3 பேர் தப்பினர். 2 ஆண்டுக்கு முன்பு நடந்த தகராறில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இந்ததொடர் போராட்டத்தினால் முகாமில் உள்ளவர்களை வேறு இடத்துக்கு மாற்ற கியூ பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு முகாமில் இருந்த 41 பேரை இரண்டு பஸ்களில் ஏற்றி சென்றனர். அவர்களை திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு முகாமுக்கு கொண்டு சென்றனர். இது பற்றி கியூ பிரிவு போலீசார் கூறுகையில், பாதுகாப்பு நலன் கருதி செங்கல்பட்டு முகாமில் இருந்த நைஜீரியர் 6 பேர், வங்கதேசத்தை சேர்ந்த 4 பேர், இலங்கையை சேர்ந்த 31 பேர் என மொத்தம் 41 பேரை செய்யாறு முகாமுக்கு மாற்றி உள்ளோம்.
இதில் இலங்கையை சேர்ந்த 11 பேரை விடுவிக்க உள்துறை உத்தரவிட்டு உள்ளது. அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். மற்ற 30 பேரும் செய்யாறு முகாமில் இருப்பார்கள். இனி செங்கல்பட்டு முகாம் மாவட்ட சிறையாக மாற்றப்படும். கொலை, கொள்ளையில் கைதானவர்கள் இங்கு காவலில் வைக்கப்படுவார்கள் என்றனர்.
No comments:
Post a Comment