Tuesday, April 08, 2014
கீவ்::உக்ரைனின் 2 முக்கிய நகரங்களில் உள்ள அரசு அலுவலங்களை ரஷ்ய ஆதரவு படையினர் கைப்பற்றினர். இதன் பின்னணியில் ரஷ்ய அதிபர் புடின் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மீண்டும் உக்ரைனில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவில் ரஷ்யர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். அதனால் கிரீமிய மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி, தனி நாடாக ரஷ்யா அறிவித்தது. அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, ஜி 8 நாடுகள் கூட்டமைப்பில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டது. மேலும், ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடையும் விதித்தது. இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் இனி ரஷ்யா தலையிடாது. உக்ரைன் பகுதிகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ரஷ்ய அதிபர் புடின் உறுதி அளித்தார். இதை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனும் உறுதிப்படுத்தினார். இந்நிலையில், உக்ரைனுக்கு மேற்கே ரஷ்ய எல்லையில் உள்ள லுஹான்ஸ்க் நகரில் அமைந்துள்ள உக்ரைன் பாதுகாப்பு படையினரின் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய ஆதரவு படையினர் முற்றுகையிட்டு அலுவலகத்தில் ரஷ்ய கொடியை ஏற்றினர்.
அதே போல், தென்மேற்கு உக்ரைனில் உள்ள டோனிட்ஸ்க் நகரில் உள்ள அரசு கட்டிடத்தை ரஷ்ய படையினர் சூறையாடினர். அந்த அலுவலகத்தில் ரஷ்ய கொடி ஏற்றி, ரஷ்யா ஆதரவுடன் அங்கு டொனிட்ஸ்க் குடியரசு நாடு உருவாகி உள்ளதாக அறிவித்தனர். கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்ய ஆதரவு உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச் ரஷ்யாவுக்கு தப்பி சென்றனர். அதை தொடர்ந்து, கிழக்கு உக்ரைனில் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ரஷ்ய படையினர் 2 அரசு கட்டிடங்களை கைப்பற்றியதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதன் பின்னணியில் ரஷ்ய அதிபர் புடின் இருப்பதாக உக்ரைன் உள்துறை அமைச்சர் ஆர்சன் அவாகோவ் குற்றம் சாட்டி உள்ளார்.



No comments:
Post a Comment