Pages

Wednesday, April 23, 2014

பொது இடங்களில் பிச்சை எடுத்தால் நடவடிக்கை: ஐகோர்ட்டு!

Wednesday, April 23, 2014
சென்னை::பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கையை  எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
 
சென்னை ஐகோர்ட்டில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த எழில்முருகன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், 'தமிழ்நாடு பிச்சை எடுப்பு தடுப்பு சட்டத்தை தமிழகத்தில் தீவிரமாக செயல்படுத்த தலைமை செயலாளர், உள் துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.
 
இந்த மனுவை தலைமை நீதிபதி சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
 
இதே கோரிக்கைகளை கொண்ட மனு கடந்த 2006_ம் ஆண்டு இந்த ஐகோர்ட்டில் தொடரப்பட்டது. அப்போது, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், 'சாலைகளில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள், குழந்தைகள் நல கமிட்டியிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். பிச்சைக்காரர்கள் (ஜனத்) தொகையை பொறுத்து, மாவட்டத்துக்கு ஒரு பிச்சைக்காரர்கள் காப்பகம் கட்டப்படுகிறது.
 
இதற்காக 70 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுஇடங்கள், வழிபாட்டு தலங்களில் பிச்சை எடுப்பவர்களை பிடித்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் அவர்களை முகாம்களில் அடைத்து வருகிறோம்.
 
பிச்சை எடுப்பதை தடுக்கும் அனைத்து நடவடிக்கையையும் அரசு மேற்கொண்டு வருகிறது' என்று கூறப்பட்டு இருந்தது.
 

எனவே இந்த வழக்கில் மேற்கொண்டு உத்தரவுகளை பிறப்பிக்க நாங்கள் விரும்பவில்லை. அதேநேரம், இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவின் அடிப்படையில், தகுந்த நடவடிக்கையை பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்கள் மீது தமிழக அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment