புதுடெல்லி::தமிழக மீனவர் பிரச்சினை மற்றும் தெலங்கானா விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளில் நடவடிக்கைகள் நேற்று 3-வது நாளாக முற்றிலும் முடங்கின.
மக்களவையும் மாநிலங்களவையும் நேற்று காலை தொடங்கியதும், தெலங்கானா உருவாக்கத்துக்கு எதிராக ஆந்திரப் பிரதேச உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
அதேவேளையில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் பிரச்சினையை தமிழகத்தை சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் எழுப்பினர். இதன் காரணமாக, மக்களவையை நேற்று பிற்பகல் வரை சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார். அதேபோல், மாநிலங்களவையிலும் இந்த பிரச்சினையை எழுப்பியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையொட்டி தலைவர் அமீத் அன்சாரி ஒத்திவைத்தார்.
மக்களவை பிற்பகல் 12 மணிக்கு மீண்டும் தொடங்கியதும், இதே பிரச்சினைகளில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மீரா குமார் அவையை நேற்று முழுவதும் ஒத்திவைத்தார்.
அதேவேளையில், இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை மதியம் 2.30 மணிக்குத் தொடங்கியது. அப்போது, மீண்டும் ஏற்பட்ட அமளியின் காரணமாக, அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, மாநிலங்களவையில் கடும் அமளிக்கு இடையே மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.தெலங்கானா, தமிழக மீனவர்கள் உள்ளிட்ட பிரச்சினைகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக முடக்கப்பட்டது மத்திய அரசுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது.

No comments:
Post a Comment