Friday, December 13, 2013

காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்கும் காலஎல்லை நீடிப்பு!

Friday, December 13, 2013
இலங்கை::காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்கும் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ம் திகதி வரை முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியுமென காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் தனிநபர் காணாமல் போனவர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை விசாரிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆணைக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
 
1990ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் திகதி முதல் 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டின் ஏதாவதொரு பிரதேசத்தில் வசித்த எவராவது ஒருவர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் போயிருந்தால், அது தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும்.
 
அவற்றை விசாரணை செய்து பரீட்சிப்பதற்குரிய அதிகாரத்தை ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளார்.
 
ஏற்கனவே நவம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டது. எனினும் தற்போது டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை காலஎல்லையை நீடிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
 
காலஎல்லை நிறைவடைந்ததும். வடக்கு கிழக்கு பகுதியில் வாய்மூல விசாரணைகளும் இடம்பெறவுள்ளன. முறைப்பாடுகள் தொடர்பில் ஆழமாக ஆராயப்படும்.
 
இதேவேளை மேலதிக தகவல்களை 0112 19 99 44 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியுமென வடக்கு கிழக்கு பகுதியில் காணாமல்போனோர் பற்றிய முறைப்பாட்டை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment