Pages

Wednesday, December 18, 2013

ராஜிவ்காந்தி கொலை வழக்கு மரண தண்டனை கைதி பேரறிவாளன் விவகாரம்: சிபிஐ முன்னாள் டிஎஸ்பியை ஆஜராக கோரிய மனு தள்ளுபடி!

Wednesday, December 18, 2013
சென்னை::முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரியை ஆஜராக கோரிய வழக்கை தடா சிறப்பு நீதிமன்றம், விசாரணைக்கு உகந்ததல்ல என்று நிராகரித்தது.
 
சென்னை தடா சிறப்பு நீதிமன்றத்தில் வக்கீல் எம்.துரைசெல்வன் தாக்கல் செய்த மனு:ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்து வந்த ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி தியாகராஜன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன் பெயர் எப்படி சேர்க்கப்பட்டது என்பது குறித்து தெரிவித்துள்ளார். அவரது  கருத்து பேரறிவாளனுக்கு  கூட்டுச்சதியில் தொடர்பில்லை என்பதை தெளிவாக்கி உள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்திருக்க முடியும்.

எனவே, தூக்குத் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் தொடர்பான இந்த விஷயத்தில் வக்கீல்களுக்கு மட்டுமல்லாமல் பொது மக்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ அதிகாரி தியாகராஜனை இந்த நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அவரது வாக்குமூலத்தை (164 ஸ்டேட்மெண்ட்) பதிவு செய்யு மாறும் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 
இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என்று முடிவு செய்வதற்காக தடா சிறப்பு நீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்தது. தடா சிறப்பு நீதிமன்ற வழக்கு புத்தகத்தில் எண்ணிடப்படாமல் இருந்த இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஏற்கனவே சிபிஐ அதிகாரியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலை யில் இதை ஏற்க முடியாது. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தள்ளுபடி செய்தார்.

No comments:

Post a Comment