Pages

Tuesday, December 31, 2013

தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்!

Tuesday, December 31, 2013
சென்னை::மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கடந்த சனிக்கிழமையன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற புதுகை மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துச் சென்றுள்ளது. மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், வலைகள் மற்றும் டீசலையும் பறித்துச் சென்றுள்ளது.

மேலும், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்களையும் நேற்று சிறைபிடித்துச் சென்றுள்ளது. இலங்கை கடற்படையின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே, மத்திய அரசு ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 210 மீனவர்களை யும், நேற்றும், நேற்று முன்தினமும் கைது செய்யப்பட்டுள்ள 40 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள படகுகள், வலைகள் உள்ளிட்டவற்றை திரும்ப அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

மேலும், மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

 

No comments:

Post a Comment