Pages

Friday, December 13, 2013

பாகிஸ்தானுக்கு வர வேண்டும் மன்மோகன் சிங்குக்கு நவாஸ் ஷெரீப் அழைப்பு!

Friday, December 13, 2013
புதுடெல்லி:பாகிஸ்தானுக்கு வரச் சொல்லி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பாகிஸ் தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளார்.
 
அந்த கடிதத்தை அவரது சிறப்பு உதவியாளர் தாரிக் பதமி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து அளித்தார். நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும், பாகிஸ்தானில் உள்ள கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப், பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் சந்தித்து பேசினார். அதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக நவாசின் கடிதம் பிரதமர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
 
இதுகுறித்து ஷாபாஸ் ஷெரீப் நிருபர்களிடம் கூறுகையில், நல்லெண்ண அடிப்படையில் பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தான் வர நவாஸ் அழைப்பு விடுத்துள்ளார் என்றார். அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் என்ன பதில் அளித்தார் என்று நிருபர்கள் கேட்ட போது, ‘பார்க்கலாம்’ என்று மட்டும் அவர் தெரிவித்ததாக ஷாபாஸ் கூறினார். கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
 
ஆனால் எல்லை பிரச்னை, தீவிரவாதம் உள்ளிட்டவை அடிப்படையில் அவரது வருகைக்கான முடிவுகள் நீண்டு கொண்டே போகின்றன. பாகிஸ்தான் தூதரக தரப்பில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட பிரதமர் நவாஸ் விரும்புகிறார். இரு புறத்திலும், அமைதியும், நல்லிணக்கமும் ஏற்பட ஒத்துழைப்பு அளிக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தற்போதைய பாகிஸ்தான் அரசியல் சூழலில் நவாசுக்கு அடுத்தபடியாக அதிகாரம் வாய்ந்த தலைவராக ஷாபாஸ் கருதப்படுகிறார். கடந்த செப்டம்பரில் நியூயார்க்கில் நடைபெற்ற இரு நாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு பிறகு எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் மவுனம் பாகிஸ்தானுக்கு ஏமாற்றம் அளிப்பதாக ஷாபாசின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment