Pages

Friday, November 22, 2013

நாட்டில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் அதன் சக்திகள் இன்னும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த சக்திகள் நாட்டின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் பாரிய தடையாகவுள்ளன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Friday, November 22, 2013
இலங்கை::நாட்டில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் அதன் சக்திகள் இன்னும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த சக்திகள் நாட்டின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் பாரிய தடையாகவுள்ளன என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அந்தத் தடைகளை கடந்து நாட்டில் சமாதானத்தையும் பொருளாதார அபிவிருத்தியையும் ஏற்படுத்துவது தேசிய கடமையாகும். சர்வதேச ஒத்துழைப்புக்களும் அவசியமாகும். எனவே அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிற்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் ஒன்பதாவதும் அடுத்த வருடத்துக்குமானதுமான வரவு செலவுத்திட்டத்தை நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றுகையில்:-
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 9 ஆவது வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். நாட்டில் சமாதானமும் அபிவிருத்தியும் ஏற்பட்டுள்ள காலத்தில் இருக்கின்றோம்.
 
நாட்டில் நிலவிய 30 வருட கால யுத்தம் நிறைவடைந்து தற்போது அமைதியும் அபிவிருத்தியும் ஏற்பட்டுள்ளது. வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபையும் நிறுவப்பட்டுள்ளது. வடக்குத் தேர்தலை மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன்
 
மூன்று மாதங்களுக்கு முன்னர் நாட்டில் மூன்று மாகாணங்களுக்கு தேர்தல் நடந்தது. அதில் 56 வீதமான மக்கள் எங்களுக்கே வாக்களித்திருந்தனர். அந்தவகையில் அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
 
1976 ஆம் ஆண்டு இலங்கையில் அணிசேரா மாநாடு நடைபெற்றதன் பின்னர் தற்போது பாரிய சர்வதேச மாநாடான பொதுநலவாய மாநாட்டை நடத்தி முடித்துள்ளோம். 53 நாடுகள் கலந்துகொண்ட இந்த பொதுநலவாய மாநாட்டின் மூலம் எமது நாட்டின் அபிமானம் மேலோங்கியுள்ளது.
 
எமது நாடு ஜனநாயக ரீதியில் எவ்வாறு முன்னேற்றமடைந்துள்ளது என்பது இந்த மாநாட்டின் ஊடாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. எனவே பொதுநலவாய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தமை தொடர்பில் நியாயமான ரீதியில் மகிழ்ச்சியடைகின்றோம். மேலும் எமது நாட்டில் முதலீடுகளை அதிகரிக்கவும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்த மாநாடு சிறந்த முறையில் உறுதுணையாக அமைந்துள்ளது.
 
பொதுறநலவாய அரச தலைவர்களின் தலைமைப் பதவி இலங்கைக்கு கிடைத்துள்ளமையானது இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.
 
நாங்கள் புதிய இலங்கையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம். இராணுவ வீரர்களின் தியாகத்தின் காரணமாகவே இந்த வெற்றியையும் அமைதியையும் சமாதானத்தையும் அடைந்துள்ளோம். வறுமை வீதம் குறைவடைந்து செல்கின்றது. மின்சாரம் துண்டிப்பு என்ற விடயத்தையே மறந்துவிட்டோம். நாட்டில் காணப்பட்ட வரட்சி மற்றும் உலக நிதி நெருக்கடி ஆகியவற்றுக்கு மத்தியிலும் எமது பொருளாதாரம் பலமடைந்துவருகின்றது.
 
நாட்டில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் அதன் சக்திகள் இன்னும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த சக்திகள் நாட்டின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் பாரிய தடையாகவுள்ளன.
 
எனினும் அந்தத் தடைகளை கடந்து நாட்டில் சமாதானத்தையும் பொருளாதார அபிவிருத்தியையும் ஏற்படுத்துவது தேசிய கடமையாகும். எனவே அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment