Friday, November 8, 2013

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய இலங்கை மர்ம படகு: புலனாய்வு துறை விசாரணை!

Friday, November 08, 2013
ராமேஸ்வரம்::ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடலில், ரோந்து சென்ற கடற்படையினர், இரண்டாம் மணல் தீடையில், ஒரு பைபர் கிளாஸ் படகு ஒதுங்கி இருந்ததை பார்த்தனர். சேதமடைந்த அந்த படகை, கடற்படை வீரர்கள் மீட்டு, ராமேஸ்வரம் கொண்டு வந்தனர். மர்மமான முறையில் கரை ஒதுங்கிய படகை மண்டபம் கடலோர பாதுகாப்பு, மத்திய, மாநில உளவு போலீசார் பார்வையிட்டு, விசாரித்து வருகின்றனர்.
 
இலங்கை மன்னார், பேசாளை மீனவர்களுக்கு சொந்தமான, 10 அடி நீளமுள்ள இப்படகில், இரு மீனவர்கள் மட்டுமே செல்ல முடியும். இலங்கையில் ஏற்பட்ட சூறாவளி காற்றால், படகின் நங்கூர கயிறு அறுந்து , காற்றின் வேகத்தில் தனுஷ்கோடியில் கரை ஒதுங்கியதா, இலங்கை ராணுவத்திடம் இருந்து தப்பிக்க, படகில் வந்த இலங்கை தமிழர்களா அல்லது புலி பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனரா என, விசாரித்து வருகின்றனர்.
 
மேலும், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் வடக்கு கடல் பகுதியிலிருந்து மர்மநபர்கள் சிலர் பைபர் கிளாஸ் படகு ஒன்றில் இலங்கைக்கு பொருட்களை கடத்தி சென்றதாகவும் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
 
இந்த 2 படகுகளும் இலங்கையை சேர்ந்தவை என்று அப்பகுதி மீனவர்கள் புலனாய்வு துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய, மாநில புலனாய்வு துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment