Pages

Tuesday, November 12, 2013

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்ட புலிகளின் முன்னணி உறுப்பினரை கைது செய்ய நடவடிக்கை: திவயின!

Tuesday, November 12, 2013
இலங்கை::வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்ட, விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் முன்னணி உறுப்பினர் எனக் கூறப்படும் தம்பி அண்ணா என்பவரை கைது செய்வதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

புலிகளின் தலைவர்  பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் பொட்டம்மான் ஆகியோருடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்த இந்த சந்தேக நபர் கொழும்பு பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனக் கூறப்படுகிறது.

சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக பல்வேறு முறைகளை பின்பற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புலிகளின் சந்தேக நபர்களை விடுதலை செய்வது மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் குரல் கொடுத்து வரும் இவர் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதம் இருந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட தம்பி அண்ணா என்ற இந்த சந்தேக நபர் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருந்ததுடன் தோல்வியடைந்தார்.

புலிகளின் தலைவர் மற்றும் அதன் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த இவர், தென் பகுதியை சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் சுங்க அதிகாரிகளை அழைத்துச் சென்று அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அதி நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய தொடர்புச் சாதன கருவிகளை இந்த நபர் இரகசியமான முறையில் புலிகள் அமைப்புக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் இந்த நபரை பொலிஸார் கைது செய்ய பல தடவைகள் முயற்சித்ததாகவும் அவர் இரகசியமான முறையில் நாட்டில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் வெளிநாட்டு கடவூச்சீட்டுடன் இலங்கை திரும்பிய இவர், யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து புலிகள் அமைப்புக்காக குரல் கொடுத்து வருவதாக திவயின தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment