Pages

Thursday, November 14, 2013

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை: இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்!

Thursday, November 14, 2013
சென்னை::தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் உறுதியளித்துள்ளதாக சன் செய்தி வெளியிட்டுள்ளது.
 
மீனவர் பிரச்சினைக்கு இந்தியாவும் மற்றும் இலங்கையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அமைதியான தீர்வு காணப்பட வேண்டுமெனவும், அதை இரு நாடுகளும் அமுல்படுத்துமெனவும் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள ஆறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களின் பிரதிநிதிகள் சல்மான் குர்ஷித்தை அவரது இல்லத்தில் டெல்லியில் நேற்று சந்தித்துள்ளனர்.
 
இதன்போது, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்னர் இது சாத்தியமாகுமென தான் நம்புவதாகவும் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார்.
 
இரு நாடுகளின் மீனவ சங்கங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதை இலங்கையில் நடத்த வேண்டுமென்று இலங்கையும், தமிழகத்தில் நடத்த வேண்டுமென்று தாமும் வலியுறுத்தி வருவதாகவும் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதன்போது இலங்கை சிறையிலுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 86 மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட 41 படகுகளை திரும்ப ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
 
மேலும் தமிழகம் மற்றும் இலங்கை மீனவ அமைப்புகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகளை நடாத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக சன் செய்தியில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மனு ஒன்றை மீனவர் சங்க பிரதிநிதிகள் சல்மான் குர்ஷித்திடம் கையளித்துள்ளனர்.

No comments:

Post a Comment