Pages

Monday, November 18, 2013

தமிழகத்தில் கன மழைக்கு 12 பேர் பலி: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Monday, November 18, 2013
சென்னை::கடலோர மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். சென்னையிலும் தொடர் மழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் மதியம் நாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. அதன் தொடர்ச்சியாக  தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 220 மிமீ மழை பெய்துள்ளது.

திருச்சி 140 மிமீ, சாத்தனூர் அணை, வந்தவாசி, செம்பரம்பாக்கம் 130 மிமீ, சென்னை விமான நிலையம், பூந்தமல்லி 120 மிமீ, திருவள்ளூர், மதுராந்தகம், செஞ்சி, ஹரூர் 110 மிமீ, திண்டிவனம், புதுச்சேரி, திருத்தணி, புள்ளம்பாடி 100 மிமீ, ஊத்தங்கரை, பூண்டி, போச்சம்பள்ளி, மயிலம், தர்மபுரி, திருவாலங்காடு, தோகைமலை, லால்குடி 90 மிமீ, செட்டிகுளம், வேம்பாவூர், திருவையாறு, வானூர், கொள்ளிடம், தொழுதூர், சமயபுரம், திருவண்ணாமலை 80 மிமீ, அண்ணா பல்கலைக் கழகம், செங்கம், மாயனூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், தம்மம்பட்டி, விருதாசலம், திருக்கோயிலூர், குன்னூர், பள்ளிப்பட்டு, உளுந்தூர்பேட்டை, சீர்காழி, சிதம்பரம், உத்ரமேரூர், தரங்கம்பாடி, திருவிடைமருதூர் 70 மிமீ, காவேரிப்பாக்கம், சோளிங்கர், பாப்பிரெட்டிபட்டி, சங்கராபுரம், மாமல்லபுரம், செங்கல்பட்டு, குளித்தலை, செந்துரை, நெய்வேலி, பென்னாகரம் 60 மிமீ மழை பெய்துள்ளது.

படகுகள் சேதம்: கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக நாகப்பட்டினம், கடலூர் பகுதியில் மீன்பிடி படகுகள் கடல் சீற்றம் காரணமாகவும், பலத்த காற்றின் காரணமாக 200க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்துள்ளன. கடலோரப் பகுதியில் பல இடங்களில் குடிசை வீடுகள் காற்றில் சேதம் அடைந்தன. குடியிருப்பு பகுதிகளில் மழை நீரும் புகுந்தது. நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்ததால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதுடன், நீர்த்தேக்கங்களில் இருந்தும் மழை நீர் வெளியேறி விளை நிலங்களில் புகுந்தது.12 பேர் பலி: மரக்காணம் அடுத்த இலுப்பை கிராமத்தில் மரம் விழுந்து 18 வயது சதீஷ் என்பவர் இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம் புக்கரவாரி என்ற கிராமத்தில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் ஐயம்மாள்(65) இறந்தார். கும்பகோணம் அடுத்த ஆனைக்குடியில் மின் கம்பி அறுந்து விழந்ததில் ராஜேந்திரன்(50), ரவிவர்மன்(30) ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.இவர்கள் இருவரும் தந்தை மகன்.நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பொறியியல் மாணவர் கணேசன் மின் தாக்கி இறந்தார்.நாமக்கல் மாவட்டம் பொத்தூர் கிராமத்தில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் விஜயசாமுண்டீஸ்வரி(45) என்பவர் இறந்தார்.நேற்று முன்தினம் இரவு கொட்டிய மழையின்போது, கும்முடிபூண்டி அடுத்த சின்னபூரியூர் பகுதியில் இயங்கி வரும் பிளாஸ்டிக் கம்பெனி ஒன்றில் கட்டுமானப் பணிக்காக வந்து தங்கி இருந்தவர்கள் மீது 50 அடி நீள சுவர் இடிந்து விழுந்துள்ளது. அதில் 6 பேர் அதே இடத்தில் பலியாகியுள்ளனர்.

மற்றும் 9 பேர் காயம் அடைந்து மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இது தவிர பல்வேறு இடங்களில் சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்ததில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதை சரி செய்யும் பணியில் உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னையிலும் மழை தொடர்ந்து பெய்தபடி இருந்தது. அதிகாலையில் ஆரம்பித்து விட்டு விட்டு பெய்தாலும் காலையில் கடும் மழை பெய்தது. ஒரு மணி நேரம் கொட்டிய மழைக்கே சென்னையில் பல சாலைகளில் வெள்ளம் காணப்பட்டது. தாழ்வான குடிசைப்பகுதிகளும் தத்தளித்தன. பருவமழை தீவிரம்  அடையாதபோதே சாலைகள் பல்லாங்குழிகளாக உருமாறி வருகின்றன.

இன்றும் மழை உண்டு
கரை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இது மேற்கு திசையில் அரபிக் கடல் நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் இன்றும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். 

No comments:

Post a Comment