Pages

Saturday, October 12, 2013

கடலில் மீன் பிடிக்க சென்ற நாகை மீனவரை வெட்டி மீன்கள்- வலைகள் பறிப்பு!

Saturday, October 12, 2013
நாகப்பட்டினம்::நாகை அருகே உள்ள வெள்ளப்பள்ளம் என்ற இடத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆண்டியப்பன் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 41), ராஜமாணிக்கம் (60) கோவிந்தராஜ் (45), இன்னொரு கிருஷ்ணமூர்த்தி (42), ஆகிய 4 பேரும் கடந்த 10-ந்தேதி விசைப்படகில் கோடியக்கரை சென்று தென் கிழக்கு பகுதியில் 20 நாட்டிக்கல் தூரம் சென்று மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

நேற்று இரவு 11 மணி அளவில் மீனவர்கள் 4 பேரும் அப்படகில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு விசைப்படகில் வந்த இலங்கை  மீனவர்கள் நாகை மீனவர்கள் பிடித்து வைத்து இருந்த மீன்கள் மற்றும் வலைகளை அள்ளிக்கொண்டு சென்றனர்.

இதனை பார்த்த மீனவர் கிருஷ்ணமூர்த்தியின் காலில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டனர். இதைத்தொடர்ந்து கரை திரும்பிய மீனவர்கள் காயம் அடைந்த கிருஷ்ண மூர்த்தியை நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சைஅளித்து வருகின்றனர்.

இதுகுறித்து கிருஷ்ண மூர்த்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நாங்கள் கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்து விட்டு நேற்று இரவு தூங்கிக்கொண்டு இருந்தோம். அப்போது அங்கு விசைப்படகில் வந்த இலங்கை  மீனவர்கள் நாங்கள் பிடித்து வைத்து இருந்த மீன்களை அள்ளி சென்றனர். மேலும் எங்களது வலைகளையும் எடுத்து சென்றனர்.

இதனை தடுக்க முயன்ற என்னை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். தொடர்ந்து கொடுக்கும் தொல்லைகளால் மீன் பிடிக்கசெல்ல மிகவும் அச்சமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு முன்னர் கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த 64 மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் கைது செய்து இலங்கையில் சிறை வைத்தனர். அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் விடுவிக்கப்பட்டு சொந்த ஊர் திரும்பினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் நாகை மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment