Sunday, October 20, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுடன் இணைந்து தமிழீழத்தை அமைப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் அவதானமாக இருக்க வேண்டும். அத்தோடு நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு தூர நோக்குடன் செயற்பட வேண்டும்.இன்றேல் இலங்கையில் தமிழீழம் அமைவதை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரித்துள்ளது.
தமிழீழத்தை அமைப்பதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யுத்தத்திற்கு பின்னர் மிகவும் சூட்சுமமாக மேற்கொண்டு வருகின்றது. புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் திட்டத்தை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திட்டம் மிகவும் தந்திரோபாயமானதும் பயங்கரமானதுமானதுமாகும் என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர தெரிவித்தார்.
மூன்று தசாப்தகால யுத்தத்தால் உருவாக்க முடியாத தமிழீழத்தை இலகுவாக உருவாக்குவதற்கான நகர்வுகளை திட்டமிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது. ஆனால், அந்த திட்டமானது வெளிப்படையாக தெரிகின்ற ஒன்றல்ல. எனவே, அரசாங்கம் இந்த விடயத்தை ஆராய்ந்து இராஜதந்திர ரீதியில் அணுகவேண்டும்.
வடமாகாண சபைத் தேர்தலில் இனவாத ரீதியிலான பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ் மக்களின் அமோக ஆதரவினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ள மாட்டார் என கூட்டமைப்பு கூறிவந்தது. ஆனால், பின்னர் ஜனாதிபதி முன்னிலையில் அவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இதன் மூலம் ஜனாதிபதியை இலகுவாக தம் வலையில் வீழ்த்தி உள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
இதனை சாதாரண விடயமாகக் கருத முடியாது. கடுமையாக தமிழ் இனவாதம் பேசிய இவர்கள் ஏன் இப்படி திடீரென தமது நிலைப்பாட்டை மாற்றினார்கள் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே, அவர்களின் தமிழீழக் கனவை அடைவதற்கான வேலைத் திட்டத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே இவ்வாறான அணுகுமுறையினை இவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளை நம்மால் நேரடியாக அவதானிக்க முடிந்தது. ஆனால், தமிழக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை அவ்வாறு அறிந்து கொள்ள முடியாதுள்ளது.இது புலிகளின் செயற்பாட்டை விட மோசமானது எனவே, அவர்களின் செயற்பாடுகளை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் தான் புரியும்.
இந்தியாவுடன் இணைந்து தமிழீழத்தை அமைப்பதற்கான அடித்தளத்தினை கூட்டமைப்பு ஏற்கனவே வகுத்திருந்தது. அதற்கமையவே தற்போது செயற்படுகின்றது. கடந்த மனித உரிமைகள் அமர்விலும் இந்தியாவின் தந்திரோபாயமான செயற்பாடுகளை காண முடிந்தது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிலும் அவர்களுடைய ஈழக் கனவை அடைவதற்கான நகர்வுகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளையும் மிக தந்திரோபாயமாக ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதாவது, கனடா போன்ற சில நாடுகள் பொதுநலவாய மாநாட்டில் கலந்துக் கொள்ளவி;ல்லை என தெரிவித்திருக்கிறது. அதேபோன்று சில நாடுகள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு மனித உரிமைகள் என்ற முகமூடியணிந்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தயாராகவுள்ளன. இவையெல்லாம் கூட்டமைப்பின் திட்டங்களே.
பொதுநலவாய மாநாட்டில் இந்தியாவின் சார்பில் எவரும் கலந்து கொள்ள கூடாதென தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பகிரங்கமாகக் கூறி வருகின்றார். அதேபோல் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டில் கலந்துக் கொள்ள மாட்டார் என்ற செய்தியும் பரவலாக வெளிவருகின்றது. ஆனால், இதற்குள்ளும் ஒரு இராஜதந்திரம் அடங்கியுள்ளது.
மன்மோகன் சிங் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க மாட்டாரென கூறிய போதிலும் அவரை அந்த மாநாட்டில் கலந்துகொள்ள வைப்பதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது. அதாவது, வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் விரைவில் இந்தியா செல்லவுள்ளார். அவர் இந்தியா சென்றதும் மன்மோகன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவார். அதன் பின்னர் இந்திய பிரதமர் இலங்கை வரும் வாய்ப்புள்ளது.
எனவே, இவ்வாறான அணுகுமுறைகளினூடாக அரசாங்கத்தை தமது வலைக்குள் சிக்க வைத்து தமிழீழத்தை அமைப்பதற்கான தமது திட்டத்தை படிப்படியாக மேற்கொண்டு வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment