Pages

Wednesday, October 2, 2013

சிரியாவில் சீன தூதரகம் மீது ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல்!

Wednesday, October 02, 2013
டமாஸ்கஸ்::சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக உள் நாட்டு கலவரம் நீடித்து வருகிறது. கடந்த மாதம் டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் ராணுவத்தினர் ரசாயன குண்டுகள் வீசியதில் 1300க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தெரிவித்து வருகின்றன. அதன்பின் ரசாயன ஆயுத அழிப்புக்கு சர்வதேச ஒப்பந்தத்தில் சிரியா கையெழுத்திட்டது.
 
தற்போது ஐநா நிபுணர்கள் ரசாயன ஆயுதங்களை கண்டறியும் பணியிலும், அவற்றை அழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா அறிவித்தது. இதனை ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ரஷ்யாவின் நிர்பந்தத்தை அடுத்து ராணுவ தாக்குதலை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
 
டமாஸ்கசின் மிகவும் பாதுகாப்பான பகுதியான மெஸ்சி ஹில் மலைபகுதியில் சீன தூதரகம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் சீன தூதரகம் மீது ராக்கெட் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சிரிய ஊழியர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் இதே போல் அதே பகுதியில் உள்ள ஈராக் தூதரகம் தாக்கப்பட்டதில் ஒரு பெண் ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார். 3 பேர் படுகாயமடைந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்ய தூதரகம் அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர். ஹாங் லீ தெரிவித்துள்ளார்.
 
ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்ட நாடுகள் அனைத்தும் சிரியாவின் நட்பு நாடுகள் என்பதால் இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் சிரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. -

No comments:

Post a Comment