Tuesday, October 22, 2013
மாஸ்கோ::கூடங்குளம் அணுமின் நிலையத்தில், மூன்று மற்றும் நான்காவது அணு உலை
அமைப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை பேசி தீர்க்கும் படி, அதிகாரிகளுக்கு
உத்தரவிட்டுள்ளேன்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங, மாஸ்கோவில், அந்நாட்டு அதிபர்,
விளாடிமிர் புடினை நேற்று சந்தித்து பேசினார்.
இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும்
இடையே, 60 ஆண்டுகாலமாக உறவு நீடித்து வருவதாகவும், இந்த உறவு மேம்பட்டதால், ரஷ்யா
மூலம் விமானம் தாங்கி கப்பலான, விக்ரமாதித்யா, அணுசக்தியால் இயங்கும்
ஐ.என்.எஸ்.சக்ரா, பிரமோஸ் ஏவுகணை உள்ளிட்டவை, இந்தியாவுக்கு கிடைத்துள்ளதாகவும்,
பிரதமர் மன்மோகன் தெரிவித்தார்.
சிரியாவில் ரசாயன ஆயுதங்களை ஒழிக்க, ரஷ்யா
மேற்கொண்ட முயற்சிக்காக, அதிபர் புடினுக்கு, பிரதமர் மன்மோகன் பாராட்டு
தெரிவித்தார். ரஷ்யாவின் ஒத்துழைப்பால், கூடங்குளம் அணுசக்தி நிலையம்
அமைந்துள்ளதாகவும், இந்த நிலையத்தில் இரண்டாவது அணு உலை அடுத்த ஆண்டு துவக்கத்தில்
இயங்க உள்ளதாகவும், மூன்று மற்றும் நான்காவது அணு உலை அமைவதில் உள்ள நடைமுறை
சிக்கல்களை பேசி தீர்க்கும் படி இருநாட்டு அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாக, பிரதமர்
தெரிவித்தார்.
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு, ரஷ்யா, இந்தியாவுக்கு, தொடர்ந்து
ஒத்துழைப்பு அளிக்கும்,'' என, அதிபர் புடின், பிரதமர் மன்மோகனிடம் உறுதியளித்தார்.
இதற்கிடையே, மாஸ்கோ பல்கலைகழகத்தில், பிரதமருக்கு நேற்று, கவுரவ டாக்டர் பட்டம்
அளிக்கப்பட்டது. ரஷ்ய பயணத்தை முடித்து கொண்டு, பிரதமர் இன்று, சீனாவில் மூன்று
நாள் பயணம் மேற்கொள்கிறார். பிரதமரின் சீன பயணத்தின் போது, எல்லை பிரச்னை, விசா
நடைமுறை உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது.




No comments:
Post a Comment