Pages

Tuesday, September 17, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளயிட்டுள்ள வடமாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இனத்துவேசமிக்க ஒன்றாக தயாரித்துள்ளது: மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்!

Tuesday, September 17, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளயிட்டுள்ள வடமாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் தேர்தலில் தாம் வெல்வதற்காக செய்த மக்களை திசை திருப்பும் செயலாகும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

'மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு" எனும் தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் ஊடகவியலாளர் ஒருவரினால் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

யுத்தத்திற்கு பின்னர் வட கிழக்கில் மட்டுமல்லாது நாடு பூராகவும் சமாதானம் நிலவுகின்ற இக்காலப்பகுதியில் இந்த வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுகின்றது.

உண்மையில் இந்தத் தேர்தல் நீதியாகவும் நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்பதற்காகவும் இதில் தமிழ் மக்கள் சுதந்திரமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஜனாதிபதி இத்தேர்தலை நடாத்துகின்றார்.

அது மாத்திரமல்லாமல் மாகாண சபை முறைமைகள் இந்த நாட்டில் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாகவுள்ளார்.

இது இவ்வாறிருக்க இந்த நாட்டில் மீண்டும் யுத்தம் நடைபெறும், உரிமைகள் பறிக்கப்பட்டால் மீண்டும் ஆயுதமேந்தி போராட வேண்டிய நிலை ஏற்படும் எனக் கூறி வடக்கு மக்களை இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திசைதிருப்ப முனைகிறது.

த.தே.கூ. அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தை இனத்துவேசமிக்க ஒன்றாக தயாரித்துள்ளது.

இந்த நாட்டில் கடந்த 30வருட கால யுத்தத்தின் போது நாம் வடக்கு கிழக்கு மக்கள் பல உயிரிழப்புக்களையும் உடைமைகள் சேதம் என்பவற்றைச் சந்தித்தோம்;.

ஆனால் இன்று நாம் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றோம்.

யுத்தம் நடைபெற்று 3,4 ஆண்டுகளுக்குள் கிழக்கு மாகாணம் குறிப்பாக மட்டு மாவட்டம் வரலாறு காணாத அபிவிருத்தி கண்டுள்ளது. ஏனெனில் கிழக்கு மக்கள் தேவை உணர்ந்து அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து முழு பயனையும் அடைந்துள்ளனர்.

அதே அபிவிருத்தியை வடமாகாணமும் அடைய வேண்டுமானால் இந்தத் தேர்தலை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்து வடமாகாணத்தை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல வழியமைக்க வேண்டும்.

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெல்லலாம் அல்லது ஸ்ரீ.ல.சு.க அரசாங்கம் வெல்லலாம், அல்லது ஐக்கிய தேசியக் கட்சி வெல்லலாம்.

ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விடயம் இத்தேர்தலில் எவ்வாறு நாம் பயன்பெறுவது,நன்மைகளை எப்படி அடைந்து கொள்வது என்பது தொடர்பில் வடமாகாண மக்கள் சிந்திக்க வேண்டும். சிந்தித்து அவர்களுடைய வாக்குகளை அரசாங்கத்திற்கு அளிப்பதன் மூலம் வடமாகாணத்தை அபிவிருத்தி மிக்க முன்னேற்றகரமான மாகாணமாக மாற்ற முடியும்.

ஆகவே இனப்பிரச்சினைகளை பூதாகரமாக ஊதுபவர்களை நம்பாமல் நன்றாக சிந்தித்து இந்த தேர்தலை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்த வடக்கு மக்கள் முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment