Pages

Sunday, June 16, 2013

இரணைமடு விமான ஓடுதளத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்!:-நவீன முறையில் புனரமைக்கப்பட்டிருக்கும் வடக்கு, தெற்கை இணைக்கும் ஏ 9 நெடுஞ்சாலை வைப்பு!

Sunday, June 16, 2013
இலங்கை::இரணைமடு விமான ஓடுதளத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். ஜனாதிபதி விமானப் படை வீரர்களின் அணிவகுப்புடன் வரவேற்கப்படுவதை படத்தில் காணலாம்.
 
இரணைமடு விமான ஓடு தளம் நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களி னால் உத்தியோகபூர்வ மாகத் திறந்து வைக் கப்பட்டது.
மேற்படி ஓடுதளம் 1500 மீற்றர் நீளத் தையும் 25 மீற்றர் அகலத்தையும் கொண்டுள்ளதுடன் இலங்கை விமானப் படையினரால் இதற்கான செயற்றிட்டம் தயாரிக்கப்பட்டு நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
 
புலிகளினால் முற்றாக சேதமாக்கப்பட்ட மேற்படி ஓடு தளத்தை மீள மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஏ. 60 ரக விமானத்தில் இரணைமடு விமான ஓடு தளத்தை வந்தடைந்ததன் பின்னர் மேற்படி ஓடு தளத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
 
அதனையடுத்து அப்பிரதேசத்தை ஜனாதிபதி நேரில் பார்வையிட்டார்.
இந்த விமான இறங்கு தளத்தின் நிர்மாணத்துடன் வடக்கில் மன்னார், வவுனியா, பலாலி விமான ஓடு தளங்களையும் சேர்த்து நான்கு விமான ஓடு தளங்கள் உள்ளன.
 
முப்பது வருடகாலம் புலிகளின்   கேந்திர நிலையமாக இரணைமடு விளங்கியுள்ளது. விமானப் படையினர் இதனைக் கைப்பற்றிய பின் விமான ஓடு தளத்துக்கான திட்டம் வகுத்தல், பொறியியல் மற்றும் நிர்மாணம், தொழில்நுட்பம் அனைத்தையும் நாமே பொறுப்பேற்று மீள் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
நேற்றைய இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ச அபேவிக்ரம, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. சர்வதேச தரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஓடு தளத்தில் விமானப் படைக்குச் சொந்தமான பாரிய விமானமான சீ 130 விமானத்தையும் தரையிறக்க முடியும்.
 
 
நவீன முறையில் புனரமைக்கப்பட்டிருக்கும் வடக்கு, தெற்கை இணைக்கும்  ஏ 9 நெடுஞ்சாலை வைப்பு!
 
மஹிந்த சிந்தனை தொலைநோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் நவீன முறையில் புனரமைக்கப்பட்டிருக்கும் ஏ 9 நெடுஞ்சாலையை கிளிநொச்சி நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக நேற்றுத் திறந்துவைத்தார். கிளிநொச்சி நகரில் அமைக்கப்பட்டிருக்கும் விசேட நினைவுப் படிவத்தை ஜனாதிபதி திரைநீக்கம் செய்ததைத் தொடர்ந்து ஏ9 வீதி உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டது.
 
இத்திறப்பு விழா தமிழ் சிங்கள பாரம்பரிய கலாசார முறைப்படி இடம் பெற்றது.
அநுராதபுரம் கல்குளமவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான 157 கிலோ மீற்றரைக் கொண்ட இந்த நெடுஞ்சாலை 19,125 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
 
நவீன முறையில் கார்ப்பட் மூலம் புனரமைக்கப்பட்டிருக்கும் இவ்வீதி 9 மீற்றர் (30 அடி) அகலத்தைக் கொண்டது. இவ்வீதியில் 35 பாலங்களும், 279 மதகுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவ்வீதியை புனரமைக்கும் பணிகள் 2011ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
30 மாத காலத்துக்குள் நிர்மாணப் பணிகள் அனைத்தையும் பூர்த்திசெய்ய வேண்டும் என்ற இலக்கில் ஆரம்பிக்கப் பட்ட இத்திட்டம் 2013ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி நிறைவுற்றது. இதன்படி இப்பாதையை நிர்மாணித்து முடிக்க வேண்டிய செப்டம்பர் மாதத்துக்கு நான்கு மாதங்கள் முன்னதாகவே இவ்வீதியின் பணிகள் பூர்த்திசெய்யப் பட்டுள்ளன. இவ்வீதியை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை சீன தேசிய ஏரோ டெக் னோலஜி இன்டநெஷனல் இன்ஜினியரிங் கோப்பரேஷன் பொறுப்பேற்றிருந்தது.
 
இந்நிகழ்வில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, நிர்மல கொத்தலாவல, பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, சில் வெஸ்ரின் அலன்ரின் எம்.பி., கிளிநொச்சி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவ்வீதி வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான போக்குவரத்தை மேலும் துரிதப்படுத்தும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment