Pages

Friday, May 24, 2013

வீடமைப்புத்திட்ட ஆரம்ப நிகழ்வில் இனவாதத் துண்டுப்பிரசுரத்தை விநியோகித்த இருவர் கைது!!

Friday, May 24, 2013
இலங்கை::மட்டக்களப்பு பெரிய புல்லுமலை, உறுகாமம், மங்களகம ஆகிய கிராமங்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக சென்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரிடம் ‘உறுகாமத்தில்…….. இந்திய அரசின் வீட்டுத்திட்டமா?இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா?’ எனும் தலைப்பிலான இனவாதத் துண்டுப்பிரசுரத்தை கையளித்த இருவரை கரயனாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
கிழக்கு மாகாணத்திற்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தில் மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உறுகாமக் கிராமத்தில் முஸ்லிம் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்குவதைக் கண்டித்து (22.05.2013) சென்றிருந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக்காந்தா மற்றும் பசில்ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரிடம் உறுகாமம் வாழ் தமிழர்கள் என்ற பெயரில் குறித்த துண்டுபிரசுரங்களை வழங்கியுள்ளனர்.
 
 குறிப்பிட்ட துண்டுபிரசுரத்தில் கௌரவத்திற்குரிய அரசியல் தலைவர்களே.அரச உத்தியோகத்தர்களே.1990ம் ஆண்டு உறுகாமத்திலிருந்து வெளியேறிய முழு முஸ்லிம் குடும்பங்களுக்கும் ஏறாவூர் சதாம் உசேன் கிராமத்தில் காணிகளும் வீடுகளும் வழங்கப்பட்டு விட்டன. இன்று இந்திய அரசின் வீட்டுத்திட்டத்தில் பயன்பெறும் முஸ்லிம்கள் யார்? உறுகாமத்தில் தமிழர்களை மாத்திரமே அரசாங்கம் குடியேற்றம் செய்தது. முஸ்லிம்களை அல்ல.
 
பாதிக்கப்பட்ட முழுத் தமிழர்களுக்கும் வீடுகளை வழங்குங்கள் உறுகாமம் வாழ் தமிழர்கள் என தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் குறித்த துண்டுப்பிரசுரம் பரவலாக வெளிடப்பட்டுள்ளன.
 
குறித்த விடயம் தொடர்பில் துண்டுபிரசுரங்களை வழங்கிய இருவர் கரடியனாறு பொலிசார் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் இராஜபுரத்தைச் சேர்ந்த கந்தசாமி யோகராசா மற்றும் உறுகாமத்தைச் சேர்ந்த பரமசிவம் சுரேஸ்குமார் ஆகிய இருவருமாகும் எனவும் இவர்கள் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 
இந்த துண்டுப் பிரசுர விநியோகத்தால் நிகழ்வுக்கு வந்திருந்த முஸ்லிம்கள் மத்தியில் பெரும் பதற்றமும் அச்ச நிலையும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment