Pages

Thursday, May 9, 2013

அரசு வடக்கில் தேர்தலை நடத்துமானால் நாம் பெற்ற சுதந்திரத்தை மீளக் குழிதோண்டி புலிகளின் கைகளில் கொடுத்தது போன்றதாகி விடும்: விமல் வீரவன்ச!

Thursday, May 09, 2013
இலங்கை::மாகாண சபையின் அதிகாரங்களில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை முற்றாக நீக்கிவிட்டே ஜனாதிபதி வடக்கில் மாகாணசபைத் தேர்தலை செப்டம்பரில் நடாத்தல் வேண்டும் என விமல் வீரவன்ச  வேண்டுகோள்  விடுத்துள்ளார்.
 
இன்று  பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முனன்ணி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
 
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:-
 
இதை மீறி அரசு வடக்கில் தேர்தலை நடத்துமானால் நாம் பெற்ற சுதந்திரத்தை மீளக் குழிதோண்டி புலிகளின் கைகளில் கொடுத்தது போன்றதாகி விடும். வடக்கில் மாகாண சபைத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் நிச்சயமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பே ஆட்சியைக் கைப்பற்றும். இதன் பின் அவர்களது முன்னைய நிகழ்ச்சி நிரல்கள் உள்ள விடயங்கள் அரங்கேறும். இதனால் புலிகளின் ஆதரவாளர்களுக்கும் இந்த நாட்டினை பிரிக்க முற்படும் வெளிநாட்டு சக்திகளுக்கும் மீண்டுமொரு தமிழ் ஈழம் உருவாககுவதற்கே வழிசமைத்துக் கொடுத்தது போன்றதாகி விடும்.
 
இந்த மாகாணசபை முறையை இந்தியாவின் தேவைக்காகவே அப்போது 1987ம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்த்தனவும், ராஜீவ் காந்தியும் இலங்கையில் அமுல்படுத்தினார்கள்.
 
யுத்த காலத்தில் 1980 களில் புலிகளினால் வெளியேற்றப்பட்ட சிங்கள முஸ்லீம்களை மீளக் குடியேற்றவில்லை. தற்போதைய சமாதான சூழ்நிலையிலும் இம் மக்களை மீள குடியேற்ற முடியாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வருகின்றனர்.
இச் சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வடக்கில் ஆட்சியைக் கொடுத்ததும் எவ்வாறு செயல்படும் எனக் கேள்வி எழுப்பினார் விமல் வீரவன்ச.
 
வடக்கில் ஆட்சியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பே பொறுப்பேற்கும். அதன் பின் தற்பொழுது நடைமுறையில் உள்ள கிழக்கின் மாகாணசபை ஆட்சியினை குழப்பி முஸ்லீம் காங்கிரசையும் இணைத்து கிழக்கிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆட்சியமைப்பார்கள்.
 
முஸ்லீம்களை அரசில் இருந்து பிரிப்பதற்கே தெற்கில் உள்ள சிங்கள அமைப்பு ஒன்றுக்கு நோர்வே நிதி வழங்கி முஸ்லீம்களது இனக்குரோத நிகழ்வுகளை தெற்கில் நடாத்துகின்றது.
 
இதனால் கிழக்கில் உள்ள முஸ்லீம்கள் தமிழர்களுடன் இணைவதையே விரும்புவார்கள். இதனையே எதிர்பார்த்து முஸ்லீம் காங்கிரஸ இருக்கின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கான ஒரு சட்டமூலத்தை இந்த இரு மாகாண சபையிலும் கொண்டு வந்து இணைத்து விடுவார்கள். அங்கு உள்ள பொலிசாருக்கு வேறு நிறத்திலான சீருடைகள் வழங்குவார்கள். காணி அதிகாரத்தின் கீழ் வடக்கு கிழக்கில் உள்ள சகல இராணுவ முகாம்களை மூடி காணிகளை ஒப்படைத்து விட்டு வெளியேறும்படி உத்தரவிடுவார்கள்.
 
ஆகவே தான் இவ் விடயமாக எமது தேசிய சுதந்திர முன்னணி நாடு முழுவதில் மே மாதம் 18ம் திகதி  கொழும்பு, களுத்துறை, கண்டி, காலி போன்ற மாவட்டங்களில் விழிப்புணர்வு கூட்டங்களை நடாத்த உள்ளது.
எமது கட்சியின் அங்கத்தவர்கள் இணைந்து மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி உறுப்பினர்கள் ஊடாக வடக்குத் தேர்தலை இடைநிறுத்துமாறு கோரி பாரியளவில் கூட்டங்களையும் 10 இலட்சம் கையெழுத்து வேட்டை மற்றும் துண்;டுப் பிரசுரங்களை தெற்கில் உள்ள மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும்  விமல் வீரவன்ச தெரிவித்தார்.

No comments:

Post a Comment