Saturday, May 11, 2013

கச்சத்தீவு ஏற்கனவே இரு நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இலங்கை வசம் உள்ளது: கச்சத்தீவை மீட்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்யும்: நாராயணசாமி பேட்டி!

Saturday, May 11, 2013
சென்னை::மத்திய மந்திரி நாராயணசாமி நேற்று இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய மந்திரிகள் பன்சால், அஸ்வின்குமார் ஆகியோர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்துள்ளார்கள். கட்சி தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் விருப்பத்தின் பேரில் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளார்கள்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய-மாநில அரசுகள் செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அணு சக்தி பாதுகாப்பு கழகம் ஆய்வு செய்து அறிக்கை வழங்கும். அதில் கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பானது என்று அறிக்கை வந்தவுடன் மின் உற்பத்தி தொடங்கப்படும்.

கச்சத்தீவு ஏற்கனவே இரு நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இலங்கை வசம் உள்ளது. கச்சத்தீவில் மீனவர்கள் தங்கி ஓய்வு எடுக்கலாம். வலைகள் உலர்த்தலாம், அந்தோனியர் ஆலயத்துக்கு இருநாட்டை சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம் என்ற ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. தமிழக சட்டசபையில் கச்சத்தீவை மீட்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுபோல் தி.மு.க.வும் மற்றும் பல கட்சிகளும் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி வருகின்றன. இந்த கருத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்யும்.

பா.ம.க. மீது தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை மாநில அரசின் செயலாகும். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றி முடிவெடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு. இதில் மத்திய அரசு தலையிட முடியாது. ராமதாஸ் வயதானவர் அவர் மீது மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் ஜாதி வெறி, ஜாதி பின்னணியுடன் செயல்பட்டால் அது புற்று நோய் போல் ஆகிவிடும். எனவே அரசியல் கட்சிகள் சாதியை மறந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
tamil matrimony_INNER_468x60.gif
 

No comments:

Post a Comment