Pages

Tuesday, May 28, 2013

அமெரிக்காவை சேர்ந்த ஆம்வே தலைமை நிர்வாகி உள்பட 3 இயக்குனர்கள் அதிரடி கைது

Tuesday, May 28, 2013
திருவனந்தபுரம்::ஆம்வே நிறுவனம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் உணவு பொருள், மருந்துகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து, நேரடியாக மார்க்கெட்டிங் முறையில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தை சங்கிலி தொடர் என்ற முறையில் மோசடி செய்ததாக கேரள போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதனையடுத்து சில மாதங்களுக்கு முன்பு கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள ஆம்வே இந்தியா நிறுவன அலுவலகங்களிலும், குடோன்களிலும் கேரள போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் செயின் லிங்க் முறையில் பலரை ஏமாற்றி மோசடி செய்தது தெரிய வந்தது. குடோன்களில் இருந்து ரூ.2.4 கோடி மதிப்புள்ள பொருட்களை கேரள குற்றப் பிரிவு போலீசார் கைப்பற்றினர்.

இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த ஆம்வே நிறுவன கேரள தலைவர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். மேலும் ஆம்வே இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் ஸ்காட் பிங்னி, இயக்குனர்கள் சஞ்சய் மல்கோத்ரா, அன்சு புத்ராஜ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். மூன்று பேரையும் கைது செய்ய கோழிக்கோடு பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்கிடையில், கேரள உயர் நீதிமன்றத்தில் 3 பேரும் முன்ஜாமீன் பெற்றனர்.

இந்நிலையில், குன்னமங்கலம் பகுதியை சேர்ந்த விசாலாட்சி என்பவர் வயநாடு போலீசில் புகார் செய்தார். அதில், ‘ஆம்வே நிறுவனத்தில் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். 2 ஆண்டில் 2 மடங்கு திருப்பி தருவதாக கூறினர். ஆனால், பணமும் கிடைக்கவில்லை‘ என்று கூறியிருந்தார்.  இதனடிப்படையில் நேற்று வயநாடு போலீசார் கோழிகோட்டில் இருந்த மூவரையும் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment