Pages

Friday, May 24, 2013

கடந்த ஆண்டில் 20 காணாமல் போதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது!

Friday, May 24, 2013
இலங்கை::கடந்த ஆண்டில் 20 காணாமல் போதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
 
20 பலவந்த கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அரசியல் செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்,
 
மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நீதித்துறைச் சேர்ந்தவர்கள் போன்றவர்களை ஆளும் கட்சி ஆதரவாளர்கள் துன்புறுத்தி வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
 
சட்டவிரோத கைதுகள், சித்திரவதைகள், பலவந்தமான காணாமல் போதல்கள் போன்ற சம்பவங்கள் இடம்பெறுவதாகவும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
யுத்தம் நிறைவடைந்த போதிலும் யுத்தக் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் போன்றவற்றை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் நீண்ட  காலம் தடுத்து வைக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெயர்ந்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment