Pages

Friday, April 5, 2013

இலங்கையை வெள்ளைகாரர்களின் காலனியாக மாற்ற இடமளிக்க போவதில்லை - பொதுபல சேனா!:-முஸ்லிம் பிரிவு ஒன்றை ஏற்படுத்துவதற்கு பொதுபலசேனா அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது!

Friday, April 05, 2013
இலங்கை::நாட்டின் தொழில் துறை அபிவிருத்தி எனக் கூறிக்கொண்டு, சூதாட்ட நிலையங்கள், கசினோ நிலையங்களை திறந்து, இலங்கையை வெள்ளைகாரர்களின் காலனியாக மாற்ற இடமளிக்க போவதில்லை என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர், இரண்டு மாதங்களில் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த எண்ணியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
 
பௌத்த மாநாடு ஒன்றின் மூலம் நோய்வாய்ப்பட்டிருக்கும் நாட்டை மீண்டும் உயிர்பிக்க போவதாகவும் இலங்கையை மற்றுமொரு தாய்லாந்ததாக முயற்சிக்கும் அனைவரும் இது வெறும் கனவாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசாங்கத்திற்கு மாத்திரமல்ல, எதிர்க்கட்சியினருக்கும், இலங்கை என்ற பௌத்த மண்ணை வெளிநாட்டினரின் காலனியாக மாற்றும் தேவை இருந்த போதிலும் இதனை செய்ய இடமளிக்க போவதில்லை. 
 
முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா உடை தொடர்பாக பொதுபல சேனா அமைப்பு சில செயற்பாடுகளில் ஈடுபட உள்ளதாக ஊடகங்களில் வெளியிடப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது. லங்கா ஈ நியூஸ், லங்கா சீ நியூஸ் ஆகிய இரண்டு இணையத்தளங்களும் தமது அமைப்பை விமர்சிப்பதாகவும் இந்த இணையத்தளங்கள் பொதுபல சேனா குறித்து பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றன எனவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.
 
கே.பி போன்ற புலிகளின் தலைவர்களை கைதுசெய்யும் அளவுக்கு திறமையான புலனாய்வு பிரிவு இலங்கையில் இருப்பதால், லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் சந்தருவான் சேனாதீர லண்டனில் இருப்பதால் முடிந்தால் அவரை கைதுசெய்யுமாறு தமது அமைப்பு அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாகவும் அவர்கள் தமது இணையத்தளங்கள் மூலம் நாட்டில் இனவாதத்தை தூண்ட முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
முஸ்லிம் பிரிவு ஒன்றை ஏற்படுத்துவதற்கு பொதுபலசேனா அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது!
 
தமது அமைப்புக்குள் முஸ்லிம் பிரிவு ஒன்றை ஏற்படுத்துவதற்கு பொதுபலசேனா அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
 
இந்த முஸ்லிம் பிரிவை விரைவில் ஏற்படுத்தவிருப்பதாக பொது பலசேனாவின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
 
இதற்காக இளைஞர்கள் சேர்க்கப்பட்டு அவர்கள் சமூகப்பணிகளில் பயிற்றப்படவுள்ளார்கள்.
 
இது இந்தியாவின் ராஸ்ரிய சுவாயம்சேவாக் சங் என்ற அமைப்பின் வேலைத்திட்டங்களை போல அமையும் என்று எதிர்ப்பார்ப்படுகிறது.
 
முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பு என்ற அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையை அடுத்தே பொது பலசேனா இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment