Pages

Friday, April 19, 2013

தவறான பிரசாரத்தை முன்னெடுத்துக் கொண்டு வெளிநாடுகளில் உள்ளவர்கள் இலங்கை வந்து உண்மை நிலைமையை அறிய வேண்டும்: கோட்டாபய ராஜபக்ஷ!

Friday, April 19, 2013
இலங்கை::தவறான பிரசாரத்தை முன்னெடுத்துக் கொண்டு வெளிநாடுகளில் உள்ளவர்கள் இலங்கை வந்து உண்மை நிலைமையை அறிய வேண்டுமென பாதுகாப்பு மற் றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலா ளர் கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். தொப்பிக்கலயில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உரிமைகள் பூங்கா மற்றும் உயிர்நீத்த வீரர்களுக்காக அமைக்கப் பட்ட இராணுவ ஞாபகார்த்த தூபியைத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
 
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 30 ஆண்டு யுத்த வெற்றிக்குப் பின்னர் இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இதுபற்றி அறிந்துகொள்ளாத, இலங்கை வராதவர்கள் தற்பொழுது நாட்டுக்கு வந்து உண்மை நிலைமையை அறிந்துகொள்வதற்கான தருணம் ஏற்பட்டுள்ளது. தொப்பிக்கல பகுதி வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க இடமாகும். இங்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தனர். எனினும், கடந்த காலங்களில் இந்த ஒற்றுமைக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. யுத்த வெற்றிக்குப் பின்னர் இங்கு அமைதிச் சூழல் ஏற்பட்டுள்ளது.
 
வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்றுப் பாரம்பரியம்மிக்க இடங்கள் சுற்றுலாவுக்கும், கல்வி அறிவூட்டும் நோக்கிலும் மக்கள் பார்வையிட வசதிசெய்துகொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது கூறினார்.
டில்மா நிறுவனத்தின் அனுசரணையுடன் 25 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டிருக்கும் மரபுரிமைப் பூங்காவில், கிழக்கு மாகாண யுத்த வெற்றியின் ஞாபகார்த்தக் கண்காட்சிக் கூடமொன்றும் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷர் ஹர்ஷ அபேவிக்கரம, பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்கக்கோன், சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்தபீரிஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
 
இதன்போது இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்காக ஒருநிமிட மெளனஞ்சலி அனுஸ்டிக்க ப்பட்டதுடன், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் நினைவுத் தூபிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். எல்.ரி.ரி.ஈயினரிடமிருந்து கிழக்கை மீட்டதன் முக்கிய அம்சமாக தொப்பிக்கல பிரதேசம் காணப்படுகிறது. சம்பூர், வாகரையைக் கைப்பற்றிய பின்னர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொப்பிக்கல பிரதேசம் 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது. தொப்பிக்கல குன்று முகப்பாக வரலாற்று உரிமைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment